வியாழன், 1 ஜூலை, 2021

கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் e-bike தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் - அமைச்சர் தகவல்!

 மின்னம்பலம் : உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் கிருஷ்ணகிரியில் அமையவுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது. மின்சார வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019 ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2030 வரை மாநில ஜிஎஸ்டி வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்கும்போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு, 100 சதவீதம் மின்சார வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை ஓலா நிறுவனம் அமைக்கவுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அமையவுள்ள இந்த ஆலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆலையில் இரு சக்கர வாகனத்துக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் தயாரிக்கப்படும். உற்பத்தி பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். வாகன தயாரிப்பு பணிகளில் 3,000 ரோபோக்கள் ஈடுபடவுள்ளன. இதன் மூலம் 2 விநாடிக்கு ஒரு மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்படும்” என தெரிவித்தார்.

பல முன்னணி நிறுவனங்கள், சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் வரும் நாள்களில் கூடுதல் தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புகள் உள்ளன. சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர்.

கடலூரில் ஹெச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. திண்டிவனம், செய்யாறில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்று தெரிவித்தார்.
-வினிதா

கருத்துகள் இல்லை: