செவ்வாய், 29 ஜூன், 2021

ஒரே இராகம் சுதி வேகத்திலும் தாளக்கட்டிலும் எப்படி எல்லாம் மாறும்?

 Ramasamy Duraipandi:  எனக்கு இசைக் கருவிகள் இசைக்கவோ அன்றி இராகங்களில் பாடவோ தெரியாது....
ஆனால் இசையின் இயற்பியலும் இசையின் கணிதமும் மட்டுமே தெரியும் எனக் கூறிக் கொண்டு...
அன்புத்தம்பி சகா என நான் அழைக்கும் சகாயராஜ் கி.சகாய ராஜ் மிகத்தீவிர ராசய்யா வெறியர்....
பவதாரணி இசைப்பதிவகம் ஒன்றை வெகுகாலம் நடத்தி வருகிறார்... மணம் செய்து கொள்ளாத வரம் பெற்றவர்....
தெருவில் திரியும் கவனிப்பாரில்லாத நாய்களுக்குக் காலையும் மாலையும் உணவளிப்பதை இசைப்பதிவு வேலைகளுக்கு நடுவில் செய்து வருகிறார்...
நேற்று அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ராசய்யாவின் பாடல்களில் மோகனம் எனும் முல்லை தீம்பாவணிப் பண் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தேன்....
சில பாடல்களையும் குறிப்பிட்டேன்...
நேற்று மதியம் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது... அண்ணே சில பாடல்களைப் பதிவு செய்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்....
வெறும் ஒலிக்கோவையை முகனூல் ஏற்காது எனவே ராசய்யாவின் சில படங்களைச் சேர்த்து காணொலியாக வடிவமைத்துத் தந்தார் தம்பி குமரன் GK Kumaran  ....


இப்போது சின்னதாக யோசித்துப்பாருங்கள்... ஒரே இராகம் ஆனால் சுதி வேகத்திலும் தாளக்கட்டிலும் எப்படி எல்லாம் மாற்றம் செய்ய இயலும் என்பதை.....
கீழுள்ளவை இணையத்தில் பல்வேறு பக்கங்களில் இருந்து தொகுத்தவை
------------
குறிஞ்சி – அரிகாம்போதி (28வது மேள இராகம் ஆகும்)
பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன.
பண்டைய தனித்தமிழ்ப் பெயர்களும் அவற்றின் இன்றைய பெயர்களும்
1. செம்பாலை – அரிகாம்போதி
2. படுமலைப்பாலை – நடபைரவி
3. கோடிப்பாலை – கரகரப்பிரியா
4. விளரிப்பாலை – தோடி
5. செவ்வழிப்பாலை = இருமத்திமத் தோடி
6. முல்லைத் தீம்பாணி (சாதாரி) – மோகனம்
7. செந்துருத்தி – மத்தியமாவதி
8. இந்தளம் – இந்தோளம்
9. கொன்றையந் தீங்குழல்(கொல்லி) – சுத்த சாவேரி
10. ஆம்பலந்தீங் குழல் – சுத்த தன் யாசி
11. அரும்பாலை – சங்கராபரணம்
12. மேற்செம்பாலை – கல்யாணி
பழந்தமிழிசையில் ஏழு பெரும் பண்களாவன
அரிகாம்போதி
நடன பைரவி
இருமத்திமத்தோடி
சங்கராபரணம்
கரகரப்பிரியா
தோடி
கல்யாணி
ஆகிய ஏழு பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவை பயின்று வருகின்றன. பண்களுக்கு ஆதியில் “யாழ்” என்றும் பின்னர் “பாலை” என்றும் இன்று “மேளகர்த்தா இராகம்” என்றும் பெயரும் வழங்கி வருகின்றது.
தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
1. செம்பாலை (அரிகாம்போதி)
2. படுமலைப்பாலை (நடபைரவி)
3. செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)
4. அரும்பாலை (சங்கராபரணம்)
5. கோடிப்பாலை (கரகரப்பிரியா)
6. விளரிப்பாலை (தோடி)
7. மேற்செம்பாலை (கல்யாணி)
எனச் சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.
குறிஞ்சி அரிகாம்போதி
சரிகமபதநிச / சநிதபமகரிச 28ஆவது மேள இராகம்
ஐந்து சுரப்பண்கள் மிக எளிமையானவை; இனிமையானவை. சில சான்றுகள்:
முல்லைப்பாணி (மோகனம்),
குறிஞ்சிப்பாணி (மத்யமாவதி),
நெய்தல்பாணி (இந்தளம்),
பாலைப்பாணி (சுத்தசாவேரி),
மருதப்பணி (சுத்த தன்யாசீ),
வைகறைப்பாணி (சிவரஞ்சனி),
இன்றைய மோகன இராகம் தமிழிசையின் தலைமைப் பாலையான “அரிகம்போதியின் கிளைப்பண் “மோகனம்” ஆகும். திருவாசகம் வழமையாக இப்பண்ணியலேயே பாடப்பட்டு வருகின்றது. திருவாசகம் நாட்டார் மரபா, திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ணேம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் என்ற வடிவங்களைக் கொண்டது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
குரல்பாணி என்றும், புல்லாங்குழலிசையில் இனிமை பெறுவதால் குழல்பாணி என்றும், முல்லை நிலத்தெய்வத்தால் ‘மாயோன் பாணி’ என்றும், மலர்ப்பெயரால் ‘முல்லைநில மக்கள் பெயரால் ‘ஆயன்குழல்’ என்றும், மலர்ப்பெயரால் ‘முல்லைக்குழல்’ என்றும், பக்திக்காலத்தில் ‘சாதாரி’ என்றும் இக்காலம் ‘மோகனம்’ என்றும் பெயர்பெறும் இத்தொன்மைப்பண் ஒரு நாட்டார் பண்ணாகும்.
அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போதி கருநாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
அரிகாம்போதியின் சேய் இராகங்கள் இவை.
பகுதாரி, ஈசமனோகரி, கமாஸ், துவிஜாவந்தி, நாராயணகௌளை சகானா, சாயாதரங்கிணி. காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட செஞ்சுருட்டி, கேதாரகௌளை, எதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி, கதாதரங்கிணி பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி தைவதச்சந்திரிகா, ஆன்தாளி, அரிகாம்போதி என்பது செம்பாலை என்ற முதல் தமிழ்பண்ணைக் குறிப்பதாகும்.
மோகன ராகம்
28 வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யராகம். தமிழ் திரை உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் மோகன ராகம் முதன்மையானதாகும். உலகெங்கிலும் உள்ள இசை வகைகளில் இந்த ராகத்தின் சாயல்களை நாம் காணமுடியும். இந்த உன்னத ராகத்தின் மெட்டுக்களை உலகம் முழுதும் வாழும் மக்கள் பாடி வருவதும் ஆச்சரியமே!
தமிழர்கள் தம் இசையில் இராகம் என்ற ஒரு வடிவத்தை பன்னெடுங் காலத்திற்கு முன்பே கண்டறிந்திருக்கிறார்கள். மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று.
பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த இராகம் பற்றிய பழம்பெரும் குறிப்புக்களைத் தருவது சிலப்பதிகாரமே. இசை அறிஞர் எஸ்.ராமநாதன் மோகன ராகம் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவரின் ஆய்வுகள் முல்லைத் தீம்பாணி தான் இன்றைய மோகனம் எனநிறுவியுள்ளன. சாதாரி என்றும் முல்லைத்தீம்பாணி என்றும் நம் முன்னோர் கூறியது இன்றைய மோகனப் பண்ணே. தொன்று தொட்டு மாணிக்கவாசகரின் திருவாசகம் மோகனராகத்திலேயே பாடப்படுகிறது.
விருத்தபாடல்கள் பாடுவதற்கும் பொருத்தமான ராகம் எனக் கருதப்படுகின்றது. இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கான பண் “முல்லைப்பண்” [மோகனம் ] என வகைப்படுத்தப்பட்டாலும் முல்லை நில பண்ணாகவும் கருதப்பட்டது.
இராகங்களில் ஆண், பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர். மோகனம், ஹிந்தோளம், சிவரஞ்சனி, சுத்தசாவேரி போன்ற இராகங்கள் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்களாகும். பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் இனிமைமிக்க இராகங்கள் ஆகும். இந்த ராகத்தை எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப தனித் தன்மையுடன் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
மெல்லிசைமன்னர் விஸ்வநாதன், இசை ஞானி இளையராஜா போன்ற இசை மேதைகள் அதிகமான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருகின்றார்கள். எல்லாக் காலத்திலும் பாடக் கூடிய ராகமாக மோகனம் திகழ்கின்றது. கேட்பவர்களை உருக வைக்கும் இந்த ராகம் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்றற்றது. மென்மையின் மேன்மையை உணர்த்தும் அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம். மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் இந்த இராகம் தமிழரின் பரம்பரைச் சொத்தாகும்.
தமிழ் சினிமாவில் வைகறைப்பாடலாக, காதல் பாடலாக, எழுச்சிப்பாடலாக, சோகப்பாடலாக, நகைச்சுவைப் பாடல்கள் என நவரசங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான பாடல்கள் வந்திருக்கின்றன. நிலவின் அலையில் இரவின் அமைதியில் தென்றல் சுகம் தரும் பாடலாகும்.
இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.
மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)
இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.
கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் தந்துள்ளது....

கருத்துகள் இல்லை: