வெள்ளி, 2 ஜூலை, 2021

சென்னையில் 4 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு

 கலைஞர் செய்திகள் :சென்னையில் ரூ.2,500 கோடி மதிப்பில் 4 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள தொல்காப்பியர் சுற்றுச்சூழல் பூங்காவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூலை 2)ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “ நகர மக்களும் இயற்கை சூழலை காண வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் தொல்காப்பியர் பூங்கா 100 கோடி நிதியில் ஆரம்பிக்கப்பட்டு, 69 கோடி செலவில் முடிக்கப்பட்டது. மீதமுள்ள நிதி பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டு காலமாக இந்த பூங்கா பராமரிக்கப்படாததால், பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது.



நேற்று முன் தினம் முதல்வர் அவர்கள் எங்களுடைய இலாக்காவை ஆய்வு செய்தபோது, கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்கா என்ன ஆனது? என்று கேட்டார். இதையடுத்து, இன்று காலை துறையின் செயலாளரும், மாநகராட்சி ஆணையரும் பூங்காவை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, ஒரு மாத காலத்திற்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படி அதிகளவில் மக்களை அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போன்றவர்கள் பார்வையிடலாம்.

கூவம், அடையாறு பகுதிகளை மரங்கள் அடர்ந்த பகுதியாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சியில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

1 கருத்து:

Agni Rama சொன்னது…

திருடி திருடியே உடம்பை நல்லா வளர்த்து விட்டான்
எங்கேயெல்லாம் ஆட்டையை போடுவதுன்னு பார்த்து கொண்டிருக்கிறான்