ஞாயிறு, 27 ஜூன், 2021

டெல்டா பிளஸ் வைரஸ்... தீவிரமாக கண்காணிக்க வேண்டும்”: மாவட்டங்களுக்குச் சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!

 கலைஞர் செய்திகள் : இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் 51 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதுவரை 9 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:
கொரோனோ வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் தற்போது கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகள் குறித்த ஆய்வில் நோய் பரவும் தன்மை, கடும் நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

குறிப்பாக டெல்டா பிளஸ் வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்க வேண்டும். நோய் பாதித்தவர்கள் தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள், அவரது தொடர்பாளர்களை உடனடியாக கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளி தொடர்பாளர்களுக்குப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக உருமாற்றம் அடைந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: