செவ்வாய், 8 ஜூன், 2021

12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

 மாலைமலர் :சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடன் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:  அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு 12 மாநில அரசுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு   முக ஸ்டாலின்  அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 

polimer.com :ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்களுக்கு,

இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம் என்றும், ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில், நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, இந்தியப் பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “இத்தகைய சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்” என்று தெரிவித்த அவர், 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: