ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கொரானா தடுப்பூசிக்கான முதல் காப்புரிமை வழங்கியது சீன அரசு

puthiyamugam.com :கொரானா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரானா வைரஸ் பரவல், இன்று இந்தியா உட்பட உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் உலகம் முழுதும் கொரானா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.


அதன் ஒரு பகுதியாக சீனாவின் தடுப்பூசிகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான கான்சினோ பயாலஜிக்ஸ் இன்க் நிறுவனத்துக்கு கொரானா தடுப்பூசி தயாரிக்கும் அங்கீகாரத்தை சீன அரசு கொடுத்திருக்கிறது என்று பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசால் கொரானா வைரஸ் தடுப்பூசிக்காக முதலில் அளிக்கப்படும் காப்புரிமை இதுதான் என்று ஆகஸ்டு 16 ஆம் தேதி வெளியான அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 ம் தேதி இந்தக் காப்புரிமை வழங்கப்பட்டதாக சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதே ஆகஸ்டு 11 ஆம் தேதிதான் ரஷ்ய அதிபர் புடின் கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி, ஸ்புட்னிக் வி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் கடந்த வாரம் கன்சினோ நிறுவனம் சவுதி அரேபியாவில் இந்த மாதம் கன்சினோ தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்க ரஷ்யா, பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கன்சினோ தெரிவித்த கொரானா தடுப்பூசிக்கான சீனாவின் அதிகார பூர்வ காப்புரிமையை பெற்றதால் கன்சினோ நிறுவனத்தின் பங்குகள் வேகவேகமாக உயர ஆரம்பித்துள்ளன.

 

கருத்துகள் இல்லை: