புதன், 23 செப்டம்பர், 2020

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி

tamil.samayam.com :வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி!நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ராஜ்யசபா விதி 256இன் கீழ் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த மாநிலங்களவை தலைவர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்தனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அம்பேத்கர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்று காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும், கட்சியின் மாநிலங்களவை குழு தலைவருமான குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்

கருத்துகள் இல்லை: