திங்கள், 21 செப்டம்பர், 2020

1999ல இந்த மசோதாவை எதிர்த்து உலக வர்த்தக மாநாட்டில் ... முரசொலி மாறன்

சாய் லட்சுமிகாந்த் :     இன்று முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரின் உலக புகழ்பெற்ற 2001 தோஹா உலக வர்த்தக மாநாட்டு உரையின் தமிழாக்கத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குறை இருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.    முரசொலி மாறன்86 "நான்காவது அமைச்சரவை மாநாட்டை சிறப்பாக வடிவமைத்து எங்களை அன்போட வரவேற்று பாசத்தோடு உபசரித்த மாநாட்டு தலைவர் அவர்களே உங்களுக்கு என் முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சீனா மற்றும் டாய்பே அரசுகளின் பிரதிநிதிகளையும் இம்மாநாட்டிற்கு
வரவேற்கிறேன். சீனாவை உலக வர்த்தக மய்யத்தில் இணைக்க இந்தியா தன்னாலான முயற்சிகளையும் ஆதரவையும் வழங்கிவந்துள்ளதை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அந்த கனவு இன்று நினைவாகியிருப்பதை காண நாங்கள் மகிழ்ச்சி அடைக்கிறோம்.
நான் மிகுந்த வருத்தத்தோடு உங்கள் மத்தியில் பதிவு செய்ய விரும்புவது என்னவென்றால் இந்த அமைச்சரவை மாநாட்டின் வரைவு வளரும் நாடுகளை பொறுத்தமட்டில் நியாயமற்றதாகவும் அநீதியாகவும் உள்ளது என்பதே ஆகும்.
வளரும் நாடுகள், வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் தங்கள் சார்பாக முன்வைத்த அனைத்து புள்ளிகளோடும் இந்த வரைவு முரண்படுகிறது.
இந்த வரைவு சிலரை திருப்தி படுத்த பலரின் கருத்துக்களை புறக்கணித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த வரைவின் முன்னுரை உலகநாடுகளுக்கு மத்தியில் கணிசமான வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமல் தனிநபர் விருப்பு வெறுப்புகளை மட்டுமே மய்யமாக கொண்டுள்ளதை காணும் போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த குறைகளை ஏற்கனவே பொதுக்குழுவில் சுட்டிக் காட்டிய பின்பும் அக்குறைகளை களையாமல் எங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதை பார்க்கும் போது வளரும் நாடுகளின் கோரிக்கைகளை இந்த உலக வர்த்தக மய்யம் கருத்தில் கொள்ள மறுக்கிறது என்ற முடிவுக்கு தான் நாங்கள் வர வேண்டியுள்ளது.
இந்த பொதுக்குழு, மாநாடு போன்றவற்றில் எங்களை போன்ற வளரும் நாடுகளை ஒரு சம்பிரதாயத்திற்கு மட்டுமே அழைத்திருக்கிறீர்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
மேலும் எங்கள் எண்ணங்களுக்கு எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்கும் எதிராக எங்களை வற்புறுத்துவதாக தான் எண்ணத் தோன்றுகிறது.
வளரும் நாடுகளின் கருத்துக்களை புறக்கணித்துவிட்டு இந்த வரைவை கொண்டுவருவது இந்த வரைவை பொருளற்ற ஒன்றாக ஆக்கிவிடாதா??
சியாட்டில் நகரில் தோல்வியுற்ற உலக வர்த்தக மாட்டின் தோல்விக்கு பிறகு தோகா மாநாடு வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் அந்த வெற்றி அகல கால் வைத்தலோ விரிவான அறிக்கை என்ற பெயரில் அநீதி இழைக்கப்பட கூடிய ஒன்றாக அமைந்துவிட கூடாது.
உலகமே ஒன்றுகூடி எதிர்த்த ஒரு துரதிர்ஷ்டமான சம்பவத்தை சாக்காக வைத்து உலக வர்த்தக மய்யத்தின் கொள்கையை தீர்மானிக்க அதை பயன்படுத்தக்கூடாது. இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால் உலக வர்த்தக மய்யத்தின் உறுப்பினர்களுக்குள் பிரிவினை வருவது திண்ணம்.
அப்படிப்பட்ட பிரிவினைக்கு வித்திடாமல் இந்த மாநாட்டை அதன் உறுப்பினர்கள் அனைவரின் கருத்தினை கேட்டு, அக்கருத்துகளுக்கு மதிப்பளித்து, விவசாயம் சேவைத்துறை போன்றவற்றில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொண்டு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டிய தேவை இம்மாநாட்டிற்கு உள்ளது.
எங்களை சூழ்நிலை கைதியாக்கி எங்களிடம் அபாண்டமான வாக்குறுதிகளை பெறவோ, எந்த தலைப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் நடத்தக்கூடாது என்று நிர்பந்திக்கவோ இம்மாநாடு முயற்சிக்க கூடாது.
விவசாயத்துறையில் புரட்சி ஏற்பட வேண்டுமானால் அத்துறையில் தற்சார்பையும் அதற்கு கொடுக்கும் மானியங்களையும் குறைப்பது மற்றும் விவசாய ஏற்றுமதிக்கு வளரும் நாடுகளில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தடைகளை அகற்றுவது அத்தியாவசியமான சீர்த்திருத்தமாகும்.
அதே சமயம் வளரும் நாடுகளில் கிராமப்புற வாழ்வாதாரம் விவசாயத்தை தான் பெருமளவு நம்பியிருக்கிறது.
அம்மக்களுக்கு உணவு பாதுகாப்பும் வாழ்வாதார மேம்பாட்டையும் வழங்குவது அந்த அரசுகளின் கடமையாகும். இதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
உலக வர்த்தக மய்யம் ஏற்கனவே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொண்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே போல் வளர்ச்சிக்கான திட்டங்கள் பொதுவாக இல்லாமல் அந்தந்த நாடுகளுக்கு என்று பிரத்யேகமாக இருக்க வேண்டும்.
உலகத்தில் நிலவும் வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல் இதுவரை கொண்டுவரப்பட்ட "அனைவருக்கும் ஒரே சட்டம்" என்பது தோல்வியில் முடிந்தது என்பதை நாம் அறிவோம்.
உருகுவே நாட்டில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைகளில் வளரும் நாடுகள் உலக வர்த்தக மய்யத்தின் திட்டங்களில் இருந்த வேறுபாடுகளும், சமச்சீரற்ற தன்மையும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத, பேரத்திற்கு இடம் கொடுக்காத தன்மையும் தான் உலக வர்த்தக மய்யம் முன் வைத்த திட்டங்கள் தோல்வியடைய காரணமாக அமைந்தன என்பதை 1998இல் இருந்து நாம் காண்கிறோம்.
மே 2000 ஆண்டு பொது குழு கூடி நான்காவது மந்திரிசபையில் உருப்படியான தீர்வுகள் எட்டப்படும் என்கிற அறிவிப்பை கண்டு எங்கள் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் இந்த வரைவு செயலாக்கத்திற்கு மட்டுமே சில தீர்வுககளை முன்வைத்ததோடு பல கேள்விகளையும் அய்யங்களையும் நிவர்த்தி செய்ய தவறியுள்ளது.
அந்த தீர்வுககளில் கூட பல குறைபாடுகள் பூர்த்தி செய்யப்படாமல் ஒரு இடைவெளியை விட்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் நாம் பலகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் ஏமாற்றங்களை புறந்தள்ளாமல், ஜெனிவாவில் நாம் ஒன்று கூடி எடுத்த முடிவுகளை பரிசீலனை செய்து நல்ல முடிவை எட்ட வேண்டும். அதை இந்த மாநாட்டின் பிரதான கூட்டத்திலேயே எடுக்க வேண்டும்.
சந்தை விரிவாக்கத்தை பொறுத்தவரை, உருகுவே கூட்டத்தில் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகளால் சலுகைகள் வழங்கப்பட்டாலும், அவை பல்வேறு வரிகள் கட்டணங்களை வளரும் நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் மீது விதிப்பதால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் தொய்வடைகிறது. இதற்கான தீர்வு முதலில் எட்டப்பட வேண்டும்.
இதற்கிடையில், வளரும் நாடுகளில் அதிக மக்களுக்கு வேலை வழங்கும் சிறு குறு தொழிற்சாலைகளை பாதுகாக்கப்பட வேண்டும். அவைகள் அழிவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.
புதிய விவகாரங்களும் புதிய ஒப்பந்தங்களும் புதிய விலைகளை நிர்ணயிக்கவே செய்யும். ஆனால் அவை வளரும் நாடுகளை பாதிக்காத வண்ணம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
முதலீடு, போட்டி, நம்பகத்தன்மை, வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை, தொழில் முனைவோரை ஊக்குவிக்க வர்த்தக விதிகளை எளிதாக்குவது போன்றவற்றை பற்றி நாம் பேசும் போது வளரும் நாடுகளால் மேற்கூறியவற்றை தங்களை பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய இடத்தில் இருக்கிறார்களா என்பதை நாம் யோசிக்கிறோமா??
உள்நாட்டு சட்டவிதிகளையும் கொள்கை முடிவுகளையும் பாதிக்காத வண்ணம் தான் இந்த புதிய வர்த்தக வரைவு இருக்கிறது என்று நம்மால் உறுதியாக கூற முடியுமா??
வர்த்தகத்தின் அடிநாதமாக விளங்கம் பாரபட்சமற்ற மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவை முதலீடு மற்றும் போட்டி ஆகியவற்றை கருத்தில் கொள்ளுமா??
வெறும் பலதரப்பு வர்த்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் மராக்கேஷ் ஒப்பந்தம் மேற்கூறிய மற்ற பிரச்சனைகளை பற்றி ஏதும் கரிசனம் காட்டியிருக்கிறதா??
ஒரு முடிவெடுக்கும் முன் நம்மால் இந்த கேள்விகள் எதற்குமே ஒரு உறுதியான பதிலை கொடுக்க முடியுமா என்பதே நம் சந்தேகம். இப்படிப்பட்ட சூழலில் நாம் அவசரகதியில் முடிவுகளை எட்ட முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதே எங்கள் எண்ணம்.
சிங்கப்பூர் பிரகடனத்தின் படி அனைவராலும் ஒருமனதாக முடிவு எட்டப்படும் வரை நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
அதே போல், இயற்கை பாதுகாப்பு என்ற பெயரில் முன்னேறிய நாடுகள் வளரும் நாடுகள் மீது ஒருதலைப்பட்சமாக விதிக்கும் கட்டுபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கனவே உள்ள WTO சட்டங்களே இயற்கை வளத்தை பாதுகாக்க போதுமானதாக நான் கருதுகிறேன். இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இதில் பேச்சுவார்த்தை என்ற பேச்சிற்கே இடமில்லை. இந்த இயற்கை பாதுகாப்பு சரத்து வளரும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி அழிக்க அனுப்பப்படும் பசுத்தோல் போற்றிய புலியாகத்தான் பார்க்கிறேன்.
TRIPS (அறிவுசார் சொத்து உரிமைகள் சார்ந்த வர்த்தகம்) சம்பந்தமாக நடத்தப்பட்ட உருகுவே பேச்சுவார்த்தை வளரும் நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைன் மற்றும் சாராயத்திற்கு கொடுக்கப்படும் புவிசார் குறியீடுகள் மற்ற பொருட்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் வளரும் நாடுகளின் உயிரியல் மற்றும் மரபணுவியல் வளங்களையும் பாரம்பரிய வளங்களும் சுரண்டப்படக் கூடாது.
உயிர்காக்கும் மருந்துகள் என்பது உலகமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அதை அறிவுசார் சொத்து உரிமைகள் சார்ந்த வர்த்தகம் (TRIPS) என்ற பெயரால் அரசுகள் அம்மருந்துகளை வாங்குவதற்கு எந்த தடையும் விதிக்கப்படக் கூடாது.
அதனால், WTO உறுப்பினர்கள் TRIPS ஒப்பந்தத்தை பொது சுகாதாரம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.
முடிவாக, இன்னும் முதிர்ச்சியுறாத விவகாரங்கள் அந்த துறை சார் வல்லுநர்களால் மேலும் பல கட்ட அராய்ச்சிகளுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் இந்த ஒருதலைப்பட்சமான வரைவை ஏற்கும் நிலையில் இல்லை. உருகுவே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நோக்கிய பயணமாக தான் நம் எதிர்கால திட்டங்கள் இருக்க வேண்டும். இந்த மாநாடு கிடப்பில் போடப்பட்டுள்ள பல பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை மற்றும் பரிசீலனைகள் குறித்து விரிவான தெளிவான வரையறைகளை வகுக்க வேண்டும்.
WTO என்பது பலமுனை வர்த்தகத்திற்கான அமைப்பு மட்டுமே. அது வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட முடிவுகளை எடுக்க தூண்டும் ஒரு அமைப்பாக இருக்கக்கூடாது.
உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் WTO வில் மட்டுமே விவாதக்கப்பட வேண்டிய விவகாரம் இல்லை. அதை பல்வேறு தளங்களில் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
WTO உலகை நிர்வாகிக்கும் அமைப்பு இல்லை. அது பல்வேறு அரசுகளை கட்டுப்படுத்த எத்தனிக்கக் கூடாது.
WTO வின் அடிப்படை வேலை என்பது உலக வர்த்தகம் மட்டுமே. அதில் மட்டுமே அது கவனம் செலுத்த வேண்டும். அப்படியிருந்தால் தான் பலதரப்பு வர்த்தகம் செழுமையடையும்.
மாநாட்டின் தலைவர் அவர்களே, நான் அறுதியிட்டு கூற முடியும் உங்களுக்கு வளரும் நாடுகளின் எதிர்பார்ப்பு என்ன, லட்சியங்கள் என்ன, கவலைகள் என்ன என்பது புரியும். என்னால் உறுதியாக கூற முடியும், உங்கள் அனுபவமும், அறிவும், அர்ப்பணிப்பும் பல்வேறு கடினமான பிரச்சனைகளுக்கு வளரும் நாடுகளின் தேவைகளையும் அவர்களின் மீது அக்கறை கொண்டு ஒரு கூட்டு முடிவை எட்டுவதே இனி வரும் காலங்களில் உலக வர்த்தக மய்யத்தின் செயல்பாடு அமையும் என்று நான் நம்புகிறேன். "
(தமிழாக்கம் ~ மருத்துவர் சாய் லட்சுமிகாந்த்)

 

கருத்துகள் இல்லை: