வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பெட்டிக்கடை எம்.எல்.ஏ ஜி.பி.வெங்கிடு! இறுதிவரை எளிமையாகவே இருந்த திராவிட கொள்கை வீரர்


   Govi Lenin :பெட்டிக்கடை எம்.எல்.ஏ!நம்பமுடியாததுதான்! நேற்று அரசியலுக்கு வந்து, இன்று பதவி வாங்கி, நாளையே செட்டிலாக நினைப்பவர்களுக்கு, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கடைசிவரை அடையாளமாக இருந்தது பெட்டிக்கடைதான் என்பதை! 

கோபிசெட்டிப்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜி.பி.வெங்கிடு, மடியில் கனமில்லாத அரசியல்வாதி. பெரியார் கொள்கையில் உறுதி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரப் பணி, பொதுமக்களிடம் நற்பெயர் இதுதான் பொதுவாழ்க்கையில் அவரது அசையா சொத்துகள்.

1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலம் என்பது ‘மோடியின் அக்கா’ ஆட்சிக்காலம். ஆட்சிக்கு எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ வழக்குப் போட்டாலோ ஆட்டோவில் வரும் ஆளுங்கட்சி குண்டர்கள் அவர்களைத் துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விஜயன், துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உள்பட பாதிக்கப்பட்டோர் ஏராளம். தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கவர்னர் சென்னாரெட்டிக்கான ட்ரீட்மெண்ட் தனி ரகம். சுப்பிரமணியசாமிக்கு மிகவும் ஸ்பெஷலான ட்ரீட்மெண்ட்டை வளர்மதி அண்ட் கோ வழங்கியது. சொந்தக் கட்சி எம்.எல்.ஏக்கள் முகத்திலேயே துணியைப்போட்டு அடித்து வெளுத்த வீரவரலாறும் நடந்தது.  
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பத்திரிகைகள்தான் எதிர்க்கட்சிக்குரிய பணிகளை செய்து வந்தன. நக்கீரனில் ஜெ அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களின் துறை சார்ந்த ஊழல்கள் வாரந்தோறும் அட்டைப்படக் கட்டுரையாக வந்தன. அதில் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான செங்கோட்டையன் பற்றி கட்டுரை வந்தபோது, தனது தொகுதிக்குள் நக்கீரன் பத்திரிகையே விற்கக்கூடாது என தடை விதித்தார். பல இடங்களில் பத்திரிகையை ஆளுங்கட்சியினர் எரித்தார்கள். இனி கோபி பகுதியில் நக்கீரன் பத்திரிகையை யாரும் விற்கக்கூடாது என செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கடை கடையாக மிரட்டினர்.
அந்த நேரத்தில், தன் பெட்டிக்கடையில் நக்கீரன் இதழ்களைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில், மாட்டிவைத்து துணிவுடன் விற்பனை செய்தவர் ஜி.பி.வெங்கிடு. அதற்காக அவரது கடையை அமைச்சரின் ஆட்கள் அடித்து நொறுக்கினர். ஆனாலும், வெங்கிடுவின் உறுதி குலையவில்லை. கடையை சரிசெய்து, நக்கீரன் உள்பட அனைத்து பத்திரிகைகளையும் தொடர்ந்து விற்பனை செய்தார்.
1996ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. பெட்டிக்கடைக்காரர் ஜி.பி.வெங்கிடு கோபி தொகுதியின் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ரத-கஜ-துரக-பதாதிகளுடன் போட்டியிட்ட செங்கோட்டையனை வெற்றி கண்டார். 5 ஆண்டுகாலம் மக்கள் பிரதிநிதியாக தொகுதி நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்தினார். பெரியார் கொள்கையைப் போலவே பெட்டிக்கடையையும் கடைசி வரை அவர் விடவில்லை.
கொரோனா பாதிப்பினால் தனது 83 வயதில் இறப்பெய்திய ஜி.பி.வெங்கிடு, ஓர் அரசியல் அதிசயம்.
- Govi Lenin

கருத்துகள் இல்லை: