வியாழன், 31 அக்டோபர், 2019

சசிகலா- எடப்பாடி: தூதுவரின் அடுத்த நகர்வு!

சசிகலா- எடப்பாடி: தூதுவரின் அடுத்த நகர்வு! மின்னம்பலம் :  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுகவைச் சேர்ந்தவரும், தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வருபவருமான புகழேந்தி அக்டோபர் 25 ஆம் தேதி சந்தித்துப் பேசினார். அப்போது இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தித்ததாக தெரிவித்தார் புகழேந்தி.
ஆனபோதும், எடப்பாடியுடனான சந்திப்பில் அவர் சொன்ன தகவல்களோடு பெங்களூரு சென்று சிறையிலிருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு மீண்டும் வந்து முதல்வரை சந்திப்பதாக சொல்லிவிட்டு மும்பை சென்றுவிட்டார் புகழேந்தி. அவர் சசிகலாவை சந்தித்த பிறகு மீண்டும் முதல்வர் எடப்பாடியை சந்திப்பார் என்றும் அப்போது அதிமுக, அமமுக இணைப்பு ரீதியான முயற்சிகள் அடுத்த கட்டத்தை எட்டும் என்றும் தெரிகிறது.
புகழேந்தி வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசும்போது இந்த முயற்சி இன்று நேற்று நடப்பதல்ல என்று சொல்லிவிட்டு சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

“பெங்களூரு சிறையில் தினகரன், அவரது மனைவி அனுராதா, மகள் ஆகியோர் சசிகலாவை சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். வார்டன் ரூமில் சசிகலா இருக்க அங்கே மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அறைக் கதவு திறக்கப்பட திடீரென உள்ளே வருகிறார் புகழேந்தி.
அப்போது சசிகலா, ‘வாங்க புகழேந்தி 3 நாளைக்கு முன்னாடியே வர்றதா சொன்னீங்க. நான் தான் இன்னிக்கு வர சொன்னேன் ’என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு புகழேந்தி, ‘சரிங்கம்மா... நீங்க தலைவர்கிட்ட பேசிக்கிட்டிருங்கம்மா.. நான் சுதாகர பாத்துட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் தினகரன், மனைவி, மகளுடன் சசிகலாவுடன் பேசிவிட்டு வெளியே வந்து இளவரசியை சந்திக்கிறார்கள். பின் சுதாகரனைப் பார்த்த தினகரன், ‘புகழேந்தி வந்தாரே எங்கே?’ என கேட்கிறார். அவர் போயிட்டாரே என்று சுதாகரன் பதில் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் தினகரன் வார்டன் ரூமில் இருக்கும் சசிகலாவிடம் ஏதோ சொல்வதற்காக செல்ல, அப்போது உள்ளே புகழேந்தி இருந்திருக்கிறார். தினகரனைப் பார்த்து, ‘ கொஞ்சம் இரு கூப்புடுறேன்’ என்று சொல்லிவிட்டு சசிகலா தனது உரையாடலை புகழேந்தியுடன் தொடர்ந்திருக்கிறார். இது செப்டம்பர் கடைசி வாரம் நடந்தது. அப்போதே தினகரனின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் சில முறை சசிகலாவை புகழேந்தி சந்தித்துப் பேசியபிறகுதான் அக்டோபர் 25 ஆம் தேதி முதல்வர் எடப்பாடியை சந்தித்திருக்கிறார்.
அண்மையில் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற இசக்கி சுப்பையா மூலமாகத்தான் புகழேந்தி முதல்வரை சந்தித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி சொன்ன செய்திகளை மீண்டும் சசிகலாவிடம் சொல்வதற்காக இப்போது காத்திருக்கிறார் புகழேந்தி. விரைவில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்தபிறகு இதில் அடுத்த கட்ட டெவலப்மெண்ட் இருக்கும்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: