ஞாயிறு, 27 அக்டோபர், 2019

முருகனைக் காப்பாற்ற நளினி உண்ணாவிரதம்!

முருகனைக் காப்பாற்ற நளினி உண்ணாவிரதம்!மின்னம்பலம் : முன்கூட்டியே விடுதலை மற்றும் உயிருக்கு மோசமான நிலையில் காணப்படும் கணவரைக் காப்பாற்றக்கோரி நளினி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், நளினி மத்திய பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதுதொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே ஏழு பேரின் விடுதலை பரிந்துரையை ஆளுநர் உடனடியாக ஏற்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் அல்லது உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று முருகன் கடந்த பிப்ரவரி மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அதைத்தொடர்ந்து சில நாட்களில் நளினியும் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் முருகன் தங்கியிருந்த அறையில் ஆன்ட்ராய்டு செல்போன், இரண்டு சிம்கார்டுகள், ஹெட்போன் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முருகன் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும், அவருக்குச் சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மூன்று மாதங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் முருகன் - நளினி சந்திப்பு மற்றும் வக்கீலைத் தவிர பார்வையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண்கள் சிறையில் உள்ள நளினி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நேற்று (அக்டோபர் 26) முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று முன்தினம் (அக்டோபர் 25) சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். அதன்பேரில் அவர் நேற்று (அக்டோபர் 26) காலை முதல் சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகிறார். சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் உணவை நளினி சாப்பிடவில்லை. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்ததாக சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே ஆண்கள் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்காமல் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சிறையில் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக முருகன் எந்த மனுவும் சிறை நிர்வாகத்திடம் அளிக்கவில்லை. மனு அளித்தால்தான் உண்ணாவிரதம் இருப்பதாகக் கருத்தில் கொள்ளப்படும். அவருக்குத் தினமும் வழங்கப்படும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தனர். நளினி - முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று (அக்டோபர் 26) நளினி மற்றும் முருகனை அவரது வக்கீல் புகழேந்தி நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்குக் கடந்த ஏழு நாட்களாக சரியாக சாப்பாடு வழங்கவில்லை. அதன் காரணமாக அவர் உடல்நிலை மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. முன்கூட்டியே விடுதலை மற்றும் உயிருக்கு மோசமான நிலையில் காணப்படும் கணவரைக் காப்பாற்றக்கோரி நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்” என்றார்

கருத்துகள் இல்லை: