புதன், 23 அக்டோபர், 2019

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!
மின்னம்பலம் : மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வரவுள்ளது. கடந்த மே மாதம் மத்திய அரசு வெளியிட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவில், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசும்போது, “புதிய கல்விக் கொள்கை வரைவின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று குறிப்பிட்ட அவர், “மாணவர்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும் இந்தத் தேர்வு ஆண்டுக்குச் சில முறை நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கை வரைவு-2020க்கு நாங்கள் விரைவில் தயாராக இருப்போம்” என்றும் தெரிவித்தார். ஆனால், இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே பாமக இதைக் கடுமையாக எதிர்த்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் நுழைவுத் தேர்வு கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்த ராமதாஸ், “இதேபோல் மேலும் பல கல்வியாளர்களும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும் என்று மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ள ராமதாஸ், “நுழைவுத் தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகள்தான் உதாரணம் ஆகும். பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளைத் திணிப்பது ஊரக மாணவர்களை, கல்லூரிகள் பக்கமே வராமல் தடுத்து விடும். மொத்தத்தில் இது தமிழகத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி முறையை விட மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தி விடும். எனவே, ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்குத் தடை போடும் நுழைவுத் தேர்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: