ஞாயிறு, 20 அக்டோபர், 2019

வீரமணி : மிசா: என் மீதுதான் வந்துவிழுந்தார் ஸ்டாலின்

மிசா: என் மீதுதான் வந்துவிழுந்தார் ஸ்டாலின்மின்னம்பலம் : மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் சிறை சென்ற விவகாரம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு திமுகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, ‘வின்’ தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், “மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. ஸ்டாலின் மிசா காலத்தில் சிறை சென்றாரே தவிர, மிசா கைதி இல்லை என்று கூறுகிறார்களே” என்ற கேள்வியை நெறியாளர் முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த பொன்முடி, “மிசா காலத்தில் மிசா கொடுமையினால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது. இந்த அறிக்கையில் இல்லையென்றால் அது இல்லையென்றாகிவிடாது. இந்த அறிக்கையில் இல்லாதது தனக்குத் தெரியாது என்றும் தான் நீதிபதி ஷா அறிக்கையைப் படிக்கவில்லை” என்றும் கூறினார். இந்த நேர்காணல், தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியது. இதுதொடர்பாக திமுக தரப்பிலிருந்து செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் மிசா சட்டத்தில் ஸ்டாலின் சிறை சென்றது உண்மைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி நேற்று (அக்டோபர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் ஸ்டாலின் 1976இல் ‘மிசா'வில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்து வரும்போதே அவரை அடித்துக்காயப்படுத்தி, இரவு 10 மணிக்கு மேல் 1976 பிப்ரவரி முதல் வாரத்தில், அநேகமாக பிப்ரவரி 3 அல்லது 4ஆம் தேதி இருக்கும் எனது அறையில் அவர் தள்ளப்பட்டார். அப்போது, அவர் என் மீதுதான் வந்து விழுந்தார். அவருக்கு ஆறுதல் கூறி, ரத்தம் வழிவதைத் துடைத்தவன் நான் என்பது ஆதாரபூர்வமான வரலாறு. பிறகு அவரை சிட்டிபாபு அறையில் மாற்றினர். சிட்டிபாபுவும், மற்றவர்களும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். சுமார் ஓராண்டு ‘மிசா' கைதியாகவிருந்த ஸ்டாலினும், நாங்களும் மற்ற ‘மிசா' கைதிகளும் விடுதலை செய்யப்பட்டோம். இதுதான் வரலாறு” என்று விளக்கியுள்ளார்.< தொடர்ந்து, “சென்னை மத்திய சிறையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக் கமிஷனின் அறிக்கையை (303 பக்கங்கள்) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 29ஆம் பக்கத்தில் இறந்த முன்னாள் மேயரும், எம்.பி.யுமான சிட்டிபாபு எழுதிய டைரியில் உள்ளதையும் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் பதிவு செய்துள்ளார்” என்பதையும் வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்டிபாபுவின் டைரி
தொடர்ந்து மேலும், ‘‘ஸ்டாலினை அடித்தது குறித்து சிட்டிபாபு எழுதுகிறார். ஸ்டாலின் அவர்களிடம் மன்றாடியதை அவர் குறிப்பிடுகிறார். ஸ்டாலினை அடித்தே கொன்றிருப்பார்கள் என்று கருதியதாகக் கூறினார். மேலும், சிட்டிபாபு தொடர்கிறார்... ‘ஏனையோர் தரையில் படுத்துக் கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வர முடியாத நிலையில் இருந்தனர். ஏனெனில், வந்தவர்கள் எமதூதர்கள். உடனே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். உடனே, நான் என் தம்பியைத் தள்ளிக்கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை, அடிகளே அல்ல. கொல்லன் உலைக் களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின்மீது சம்மட்டி கொண்டு அடிப்பதைப் போன்று அவை இருந்தன. அவை என் கழுத்தில் சம்மட்டிக் கொண்டு தாக்குவதைப் போல் விழுந்தன.
இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட பின்னர், என் அருமைத் தம்பியை அறைக்குள் தள்ளிக் கொண்டுவர என்னால் முடிந்தது. இச்செயல் எனக்கு நிம்மதியைத் தந்தது. இதேபோல, அவர்கள் வீராசாமியைத் தூக்கி, ஒரு குத்துவிட்டு அறைக்குள் தள்ளினர். நீலம் மூச்சுவிடத் திணறினார். அவர் வி.எஸ்.ஜிக்கு முன்னதாக அறைக்குள் தள்ளப்பட்டார். ஸ்டாலின் இந்த அடிகள் எல்லாவற்றையும் மறந்து, அவரது உடன்பிறப்புகள் போன்றவர்கள் அறைக்குள் வர உதவினார். அவர்கள் தரையில் படுக்க அவர் தனது மேல் துண்டை விரித்தும் போட்டார்' " என்று சிட்டிபாபு எழுதியுள்ளதாக குறிப்பிடும் வீரமணி,
ஜாலியான் வாலாபாக்
“ஸ்டாலின், தம்மிடம், தன்னைப் பற்றி என்னென்ன கேட்டறிந்தார் என்றும், தான் எவ்வாறு அவருக்கு ஆறுதல் அளித்தார் என்பதையும் தொடர்ந்து சிட்டிபாபு கூறியுள்ளார். வீரமணியின் முகம், அவர்பட்ட அடிகளின் காரணமாக வீங்கி இருந்தது என்றும், திரு.என்.எஸ்.சம்பந்தம் அடியின் காரணமாக முன்பு ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் வலி எடுப்பதாகக் கூறியதையும் இந்த நோட்டுப் புத்தகம் குறிப்பிடுகிறது. சிட்டிபாபு சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையர் என்ன செய்தாரோ அவ்வாறே இருந்தது என்று அதனுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்” என்றும் தனது அறிக்கையில் விளக்குகிறார்.
கோயபல்ஸின் குருநாதர்கள்
மத்தியச் சிறையில் என்னென்ன நடந்தது என்பதைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கும் மறைந்த சிட்டிபாபுவின் அறிக்கைகளை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாகக் கூறும் வீரமணி, “உண்மை இவ்வளவு சான்றுகளுடன் பவனி வருகையில், காவிகளான கோயபல்ஸின் குருநாதர்கள், ஸ்டாலின் மிசாவில் கைதாகவே இல்லை என்று துணிந்து, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட இழிபிறவிகளை இந்தப் பூமியில் காண முடியுமா? கொஞ்சம்விட்டால், ஸ்டாலின் வேறு, இவர் வேறு என்றுகூடச் சொல்வார்கள்போல. மகா வெட்கக்கேடு இது” என்றும் சாடியுள்ளார்

கருத்துகள் இல்லை: