ஞாயிறு, 20 அக்டோபர், 2019

கல்கி பகவானை அடுத்து ஜாக்கி வாசுதேவ்.. ? ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ...? பங்காரு அடிகள் ..? மாதா அமிர்தானந்தா ..?

கல்கி ஆசிரமத்தில் நடந்த ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம்.கல்கிvikatan.com - அ.சையது அபுதாஹிர் : கல்கியின் ஆசிரமம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், 500 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட மாளிகையில் ஆசிரமம், முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பெங்களூருவில் மிகப்பெரிய தொழில் நிறுவனம், உலக நாடுகளில் ஆசிரமங்கள் என்று தனி சாம்ராஜ்ஜியம் நடத்திவந்தவர் கல்கி பகவான். கார்ப்பரேட் கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்து இன்றைக்கு இந்தியாவில் பெருகிவரும் சாமியார்களில் முதல் இடம் வகிக்கும் கல்கியின் ஆசிரமம் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் 500 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் என்கிற கல்கி பகவானின் இந்த ஆஸ்திகள் எல்லாம், கடந்த 30 ஆண்டுகளில் கண்ட அசுர வளர்ச்சியே என்கிறார்கள். ஒருபுறம் ஆன்மிகம், மறுபுறம் பற்றற்ற வாழ்க்கை என்று பகவான் பக்தர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவருடைய ஒரே மகன் கிருஷ்ணா, நாடு முழுவதும் வியாபாரத்தைப் பெருக்குவதில் சிரத்தையுடன் இருந்துவந்தார். ஒரே மகனின் பேராசைதான் இத்தனை சிக்கலுக்கும் காரணமாக அமைந்துவிட்டது.



ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில், பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் கல்கி ஆசிரமத்தில், கடந்த 16-ம் தேதி முதல் மூன்று நாள்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவர்களுக்குச் சொந்தமான கல்வி நிலையம், நிறுவனங்கள் உள்ளிட்ட 40 இடங்களிலும் இந்தச் சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத நகை, பணம், அமெரிக்கா டாலர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு டாலர்கள்.


ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம்
கோவர்த்தனத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்குச் சொந்தமான அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வாராத 43.9 கோடி ரூபாய் இந்திய பணம், 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்கம், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்தியில் பி.ஜே.பி தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும் நேரத்தில் ஆசிரமத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்தச் சோதனையின் பின்னணி குறித்து பி.ஜே.பி வட்டாரத்தில் விசாரித்தபோது, “கல்கி பகவானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். ஏன்… பி.ஜே.பி-யில் உள்ள பல நிர்வாகிகளே அவருக்கு நெருக்கமானவர்கள்தாம். ஆனால், அவருடைய மகன் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். இதற்காக பல இடங்களில் பி.ஜே.பி-யின் பெயரையும் அவர் பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதை வருமானவரித்துறையும் கண்டறிந்து வந்தது.



கல்கி ஆசிரமத்தில் நடந்த ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
ஒருகட்டத்தில், இவர்கள் வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணியில் தீவிரமாக இருந்தனர். இதையும் வருமானவரித் துறை மோப்பம் பிடித்தது. இதுகுறித்த ஒரு ஃபைல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. பி.ஜே.பி ஆட்சி என்றால் ஆசிரமம் மீது நடவடிக்கை இருக்காது என்று எண்ணி இவர்கள் தொடர்ந்து இதுபோன்று தவறுகளைச் செய்துவந்தனர்.




கல்கி பகவான் முதல் விக்கெட்தான். இவர்களைத் தவிர, இன்னும் சில தென்னிந்திய ஆசிரமங்களுக்கு மத்திய அரசு குறி வைத்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு சாமியாரின் அசுர வளர்ச்சியை, மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அவர் பி.ஜே.பி-க்கும் தனக்குமான நெருக்கத்தைப் பயன்படுத்தி பல சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், கணக்கில் வராத அளவுக்குப் பினாமி சொத்துகள் அவரது ஆசிரமத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாமியாரை வைத்து சில தொழில் அதிபர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஏன்… தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவரின் பல கோடி ரூபாய் பணம் இந்தச் சாமியாரின் ஆசிரமம் வழியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இந்தச் சாமியாருக்குச் சொந்தமான இடங்களிலும் அதிரடி ரெய்டு நடைபெற உள்ளது.
அதை மத்திய அரசு, கண்டும் காணாமல் இருந்துகொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கும். இந்தியாவில் மடங்களில் நடைபெறும் பணப் பரிவரித்தனையை ஆராய தனியாக ஒரு டீமே செயல்பட்டு வருகிறது” என்று அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: