புதன், 23 அக்டோபர், 2019

இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு... வீடியோ


இன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு!மின்னம்பலம் : இன்போசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட தலைமை அதிகாரிகள் செய்த மோசடிகள் தொடர்பான ‘விசில்பிளோவர்’ புகாரைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் செய்து இருப்பதாக நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இரு பக்க புகார் கடிதத்தை பெங்களூருவிலுள்ள நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ‘விசில்ஃப்ளோவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு’ கடிதம் எழுதப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த முறைகேடுகள் வெளிவரத் துவங்கியிருக்கிறது.
இந்நிலையில், நேற்று(அக்டோபர் 22) இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது. இது மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது.
மதராசிகள் பேச்சைக் கேட்க வேண்டாம்
ஒரு பக்கம் முறைகேடுகள் தொடர்பான புகார் இன்போசிஸ் நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியான அடியாக விழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், மறுபக்கம் ஊழியர்களிடம் இனரீதியாக தலைமை அதிகாரிகள் பேசியதும் தற்போது விவாதமாகி வருகின்றது. சென்னையை சேர்ந்த இன்போசிஸ் இயக்குனர்களான டி சுந்தரம், டி என் பிரக்லாத் ஆகியோரை பற்றியும் சிஇஓ சலீல் மோசமாக பேசி உள்ளார் . அவர்கள் இருவரும் மதராசிகள், அவர்களின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம். அவர்கள் நிறைய விதிகள் சொல்வார்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்று புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் புகார் குறித்து தெரிவித்துள்ள இன்போசிஸ் தலைவர் நந்தன் நீலகேனி, “எங்களுக்கு எந்த மின்னஞ்சல்களோ அல்லது குரல் பதிவுகளோ வழங்கப்படவில்லை என்றாலும், ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இன்போசிஸ் நிறுவனம், தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் மற்றும் சி.எஃப்.ஓ நிலஞ்சன் ராய் ஆகியோருக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான உள் விசாரணைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இன்போசிஸில் உள்ள தணிக்கைக் குழு இந்த விசாரணையை சட்ட நிறுவனமான சர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் & கோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
நந்தன் நீலகேனி நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விசாரணையில் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சி.எஃப்.ஓ இந்த விஷயத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
ப்ளூம்பெர்க் புலனாய்வு ஆய்வாளர் அனுராக் ராணா கூறும் போது, “இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், குறிப்பாக ஐடி சேவை துறையில், நிறுவனத்தின் பிராண்டை கடுமையாக சேதப்படுத்தும். இது குறுகிய கால விற்பனையையும் பாதிக்கலாம், ஏனெனில் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களுக்காக பிற நிறுவனங்களைத் தேடலாம்” எனக் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: