ஞாயிறு, 14 ஜூலை, 2019

முகிலன் தானாகவே ஒழிந்து கொண்டாரா.. சமூகத்தையும்,அரசையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றினாரா?

சாவித்திரி கண்ணன் : இதை எழுதுவதா? தவிர்ப்பதா…? என்று எனக்குள்
பலமுறை யோசித்துவிட்டுத் தான் கவனமாக எழுதுகிறேன்.
இதை இப்படியே, ’பேசவேண்டாம்’ எனப் பலரும் தவிர்த்துவிட்டுப் போனால்.., வருங்காலத்தில் உண்மைகள் ஊமைகளாக்கப்பட்டுவிடும், குற்றவுணர்வைக் கொன்றுவிட்டு, நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற மனோபாவம் பொதுவாழ்க்கைக்கு வரும் சிலருக்கு தோன்றக்கூடும்…!
அதை தவிர்க்கவே பதிவு செய்துவிடுவதென முடிவெடுத்தேன்.
என் அன்புத் தோழர் முகிலன் சந்தேகமே இல்லாமல் ஒரு சிறந்த பொது நலவாதி தான்! சளைக்காத போராளி தான்!
இனிய சுபாவம், அநீதியை எதிர்த்துப் போராடும் அடங்கா குணம், பொருளியல் நாட்டமின்மை..அகியவை தமிழகமே அறிந்த அவரது சிறப்புகளாகும். இதனால் தான் அவர் காணாமல் போனதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் துடிதுடித்தோம். சமூகவலைத் தளங்களில் மட்டுமின்றி வீதியில் இறங்கி குரல் கொடுத்தோம்.
ஆனால்,இன்று நான் நன்கு தீர விசாரித்து அறிந்த வகையில் முகிலன் யாராலும் கடத்தப்படவில்லை..என உறுதி செய்த பின்பு இதை பேசாமல் மவுனிப்பதோ, அல்லது முட்டுக் கொடுத்து வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதோ…அது நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் சவக்குழியாகிவிடும்…எனக் கருதுகிறேன்.

முகிலன் காணாமல் போன இந்த மூன்றரை மாதத்தில் அவருக்கு என்னைப் போன்ற பலர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவுகளும், நம்மில் பலர் வீதியில் இறங்கி நடத்திய ஆர்ப்பாட்டங்களுமே பிறகு வெகுஜன ஊடகங்கள் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணமாயிற்று.
அவருக்கு கொடுக்கபட்ட முக்கியத்துவத்தின் பின்னணியில் அவரது முப்பதாண்டு உழைப்பு நம்முள் உருவாக்கியிருந்த தாக்கங்களே காரணம்!
ஆனால்,அதை அவர் சாதகமாக எடுத்துக் கொண்டு தனது தவறுகளை மறைத்துக் கொள்ளும் கவசமாக பயன்படுத்திவிடமுடியாது.
அவர் மீதான் பாலியல் குற்றச்சாட்டை விடவும் அவர் தானே தன்னை மறைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும்,அரசையும், நிதிமன்றத்தையும் ஏமாற்றிவிடத் துணிந்தது தான் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
உண்மையில் இந்த மோசடியை நாம் விவாதிக்காமல் திசை திருப்பும் வண்ணம் பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு அனுதாபத்தை உருவாக்கித் தந்துவிட்டது என்பது தான் கனத்திற்குரியது.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வெளிப்படைத் தன்மை தேவையில்லை, தனது செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து விட்டால்…, இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மக்களின் சொற்ப ஆதரவும், இனிவரும் காலங்களில் கிடைக்காமல் போவதற்கே அது வழிவகை செய்யும்.
அவரது சொந்த வாழ்க்கையை பற்றி நாம் பேசக் கூடாது. அவரது பொது வாழ்க்கையை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வோம்…என்றால், இது நாள் வரையிலான அவர் மீதான நம் ஈர்ப்புக்கு காரணமே அவரது சொந்த வாழ்க்கையில் அவர் கடைபிடித்த எளிமையும், நேர்மையும் தானே!
அதனால் தானே அவர் சொந்த சம்பாத்தியமில்லாமல் நண்பர்களின் தயவில் நடமாட முடிந்தது. சொந்த சம்பாத்தியமென்று எதுவுமில்லாமல் ஒரு மனிதன் கால் நூற்றாண்டுகளாக தமிழகத்தின் குறுக்கும், நெடுக்குமாக அலைய முடிவதும், எந்த ஊரில் இறங்கினாலும் தங்கிச் சாப்பிட்டுச் செல்லமுடிவதும் சொந்த வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொள்ளாதிருந்த அவரது உள்ளத் தூய்மையன்றி வேறல்ல!
இதையெல்லாம் விட அவரது சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல்,குடும்பப் பொறுப்புகளை தன் தோளில் மட்டுமே சுமந்து கொண்ட அவரது மனைவியின் உன்னத தியாகம் தான்!
நாம் இது வரை முகிலனுக்குத் தந்த மரியாதை என்பது அவரது மனைவிக்குமானது தான்!
இப்படியிருக்க, ஒரு பொது மனிதனை சொந்த வாழ்க்கையிலிருந்து எப்படி பிரித்துப் பார்ப்பது?
ஒரு ஆணும்,பெண்ணும் எந்த நிபந்தனையுமற்று விரும்பி காமத்தை பகிர்ந்து கொண்டால்,அதில் மற்றவர்கள் தலையிடப் போவதில்லை. ஆனால், ஒரு பெண்ணை நம்ப வைத்து தொடர்ந்து பாலியலுக்கு இஷ்டப்படி பயன்படுத்துவது நம்பிக்கை துரோகமாகிறது.
யோசித்துப் பார்க்கிறேன்; முகிலனிடம் இளமை தொலைந்துவிட்டது. தனக்கான உணவு மற்றும் அடிப்படை தேவையை நிறைவேற்றி கொள்ளும் திராணி கூட இல்லாதவர். எல்லாவற்றுக்கும் மேல் ஏற்கனவே திருமணமானவர். அவரிடம் இசை ராஜேஸ்வரிக்கு என்ன ஈர்ப்பு ஏற்பட்டிருக்க முடியும்…?
புரட்சியாளன், கொள்கைவாதி, பலராலும் அறியப்பட்ட பொதுநலவாதி…. இவை தானே! இதற்காகத் தான் ஈர்க்கப்பட்டு முகிலனின் கட்டளைகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். குடும்பத்திலிருந்து முகிலன் விலகி நிற்கும் தோற்றமும்,அவரது தொண்டுக்கு வாழ்நாளெல்லாம் தான் நிழல் போல் நின்று துணை செய்ய வேண்டும் என்ற ஆவலும் தானே காரணம்!
இங்கு தான் முன்பு கவிஞர் தாமரை என்னிடம் கண்ணீர் மல்க கூறியது நினைவுக்கு வருகிறது..
’’கண்ணன்.. தியாகுவிடம் நான் எப்படி வீழ்த்தப்பட்டேன்….! பணமா? – அது அவரிடம் இல்லாதது எனக்கு ஒரு பொருட்டல்ல, இளமையா ? அழகா? அதற்கெல்லாம் மயங்கும் பெண்ணாக இருந்தால் தியாகுவை நான் எப்படி விரும்பி இருக்க முடியும்?
முக்கியமானது என்னவென்றால் கொள்கை ஈர்ப்பு! புரட்சியாளன், பொதுநலவாதி, தன் குடும்பதாலேயே அங்கீகரிகப்படாமல் விடப்பட்டவன்…. நாம் துணை நிற்போமே..என்ற எண்ணங்கள் தானே..!’’
ஆக, தாமரைக்கும், இசை ராஜேஸ்வரிக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே கொள்கை ஈர்ப்பால் கொள்ளை போனவர்கள் என்பது தானே..!
இப்படியான ஆதரவை துஷ்ப்பிரயோகம் செய்யலாமா…?
முகிலன் இசை ராஜேஸ்வரியை மட்டுமா ஏமாற்றினார்? அவர் மீது அக்கரை கொண்டு, ‘’ஐயோ அவர் கொல்லப்பட்டுவிட்டாரோ.. பாவிகள் அவரை எங்கே மறைத்து வைத்து எப்படியெப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறர்களோ..’’ என்று அவர் மீதுள்ள அன்பால் 141 நாட்களாக மனம் வெதும்மிக் கிடந்த நம்மை போன்ற ஆயிரக்கணக்கானவர்களையும் சேர்த்து அல்லவா ஏமாற்றிவிட்டார்.
அதைவிட அவரிடம் எந்த எதிர்பார்ப்புமற்று வாழ்ந்த பூங்கொடியம்மையாரையும் அல்லவா பொய்ப்பேச நிர்பந்தித்துவிட்டார்.
தமிழ் இந்துவுக்கு மதிப்புக்குரிய ஹென்றிடிபேன் கொடுத்துள்ள பேட்டியில், நான் இசை ராஜேஸ்வரியை முகிலன் காணாமல் போன காலத்தில் சந்தித்த போது அவரும் முகிலன் காணாமல் போனது பற்றி கவலைப்பட்டார். தன் அம்மா,அப்பா தான் முகிலனை கடத்தி வைத்திருப்பார்களோ என்று கூட நினைத்ததாக குறிப்பிட்டார் என்பதிலிருந்து என்ன தெரிய வருகிறது…? முகிலனை கடத்த வேண்டிய அளவுக்கு இசை ராஜேஸ்வரியின் தாய்,தகப்பனுக்கு கோபம் வரக் காரணமென்ன..? என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?
அத்தகைய கோபத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஒடி ஒளிவது புரட்சியாளனுக்கு இழுக்கல்லவா? அப்படியே ஒடிப் போனாயே ….மீண்டும் வராமல் எங்கேயோ…எப்படியோ பிழைத்துக் கொண்டு இருந்திருந்தால் கூட…எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே…! உன் தேவைகளைக் கூட உன்னால் தனித்து நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் நண்பர்களின் உதவி நின்றதும் ஒடி வந்துவிட்டாயே…!
முகிலா, உன் திடீர் வருகை சூழலியல் இயக்கங்கள், போராளிகள்…அனைவருக்கும் இன்று பெரும் பின்னடைவை உருவாக்கிவிட்டதே…!
’’இந்த சமூக ஆர்வலர், சுற்றுச் சூழல் போராளி என்பவனையெல்லாம் லேசுல இனி நம்பக் கூடாது’’ என்று மக்கள் முணுமுணுக்கும் வண்ணம் ஆகிவிட்டதே… இந்த பழியில் இருந்து விடுபட இன்னும் எத்தனை,எத்தனை தியாகங்கள், காலகட்டங்கள் தேவைப்படப் போகிறதோ…!
முகிலன் ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை.இன்று நம்மை ஆள்பவர்கள்,முன்பு ஆண்டவர்கள்…ஆகிய அனைத்து அரசியல்வாதிகளும்,பிரபலங்களும் செய்தது தான் என்றால்…பணம்,பதவி,அதிகாரம்,செல்வாக்கு உள்ளவர்கள் எவ்வளவு பிழை செய்தாலும் பெரும் பாதிப்படையாமல் தப்புவது உலக நடைமுறையாக இருக்கலாம்!
ஆனால், நம்மை போன்ற எளியவர்களுக்கு நம் உயர்ந்த லட்சியங்களும்,கொள்கைகளும், நடைமுறை வாழ்க்கையின் செயல்பாடுகளுமே வேறு யார் ஒருவரையும் விட, பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்!

கருத்துகள் இல்லை: