சனி, 20 ஜூலை, 2019

ஆடை பட விமர்சனம் ....சொல்ல வந்த கருத்தும் ... .. கதையும் .

Kathir RS : மேயாத மான் இயக்குனர் என்றார்கள். நம்பிபபோய் உட்கார்ந்தேன்.
திருவாங்கூர் தோல் சீலை போராட்டம் பற்றி படக்காட்சியுடன் தொடங்கியது படம்.
நாம் என்னதான் பங்கு மாங்கென்று எழுதினாலும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே முடியாது என்று பக்கத்திலிருந்த நண்பரிடம் சொன்னேன்.
முதல் பாதியில் ஏமாற்றவில்லை.
தொடர்ந்த காட்சிகளில் நிமிர்ந்து உட்கார்வைத்தார் இயக்குநர்.
அமலாபாலுக்கு இது ஒரு மிக முக்கியமான படம் பட்டையை கிளப்பியிருக்கிறார். வாழ்த்துகள்.
அருவி திரைப்படத்தின் பாதிப்பு இருந்தது முதல் பாதியில்.
காட்சிகள் கேமிரா நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார்கள்..
முதல் பாதி போனதே தெரியவில்லை அத்தனை வேகம்.
இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளும் இந்த பாத்திரம் இந்த கதையில் என்ன செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்புடன் இடைவேளை.
இடைவேளைக்குபின்..அமலாபால் அம்மணக்காட்சிகளில் எப்படியெல்லாம் மறைத்து மறைத்து கேமரா வைக்கலாம் என்ற யோசனையிலேயே மூழ்கிவிட்டார் இயக்குநர்.
கதையைப் பற்றியோ அவர் அறிமுகப்படுத்திய அற்புதமான பாத்திரங்களைப்பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

அவர் பிரதானமாக காட்டும் இரண்டு பாத்திரங்களையுமே அம்மணமானமாக்கி அசிங்கப்படுத்தியதுதான் இயக்குநரின் சாதனை என்று சொல்லலாம்.
அவர் சொல்ல வந்த கருத்துக்கான கதை இதுவல்ல..அல்லது இந்த கதைக்கு பொருத்தமான கருத்து அதுவல்ல.
ஆடை பெண்ணியம் புரட்சி நிர்வாணம் என பேசத்தொடங்கி ராக்கெட் போல வேகம் பிடித்த திரைக்கதையை ஏதோ ஒரு மூத்திரசந்தில் பார்க் செய்துவிட்டு போய்விட்டார் இயக்குநர்.
இந்த படத்திற்கு பாதிக்கதை போதும் மீதி படத்தில் அமலாபால் அம்மணமாக இருப்பதை வைத்தே சமாளித்துக்கொள்ளலாம் எனச்சொல்லி கதையை யாராவது ஹைஜாக் செய்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை.
கதையில் அடிக்கும் ஒருவித அரசியல் நெடியும் இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
இயக்குநர் இலைமறைக்காயாகவும் அப்பட்டமாகவும் மூன்று அரசியல் காட்சிகளை வைத்திருக்கிறார்.
சன்டிவியின் பழைய &புதிய பில்டிங் அரசியல்
பரியேறும் பெருமாள் நாய் அரசியல்
வைரமுத்து மீடூ அரசியல்
இந்த மூன்றிலும் அவரது சாய்வு நிலைப்பாடு பலமாக தெரிகிறது.
அமலாபால் அம்மணமாக நடித்ததை வைத்தே படத்தை ஓட்டிவிடலாமென படக்குழுவினர் மனதார நம்பியிருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.
போட்ட முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறி விழி பிதுங்கி நிற்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது.
கடைசியா ஒரு வரில சொல்லனும்னா
பாதி படம் பார்க்கலாம்..
Kathir RS
20/7/19

கருத்துகள் இல்லை: