ஞாயிறு, 14 ஜூலை, 2019

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் என்னதான் செய்கின்றனர் ? ஸ்டாலின் முரசொலியில் மடல்

திமுக கூட்டணி எம்.பி.க்களின் சாதனை:  ஸ்டாலின்மின்னம்பலம் : தமிழகத்தின் உரிமைக் குரலாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஒலித்துவருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றிபெற்று 37 இடங்களைக் கைப்பற்றியது. மோடி மீண்டும் பிரதமரான பிறகு முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணி எம்.பி.க்கள் தினந்தோறும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து அழுத்தமான வாதங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை தினந்தோறும் சந்தித்து மனு அளித்து வருகிறார்கள். இது பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றிபெற்றிருப்பதாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள், எம்.பி.க்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பதையும் விமர்சித்திருந்தனர்.

இவை தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு இன்று (ஜூலை 14) மடல் எழுதியுள்ள ஸ்டாலின், “டெல்லிக்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில் சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள். தமிழ்நாட்டின் தீரம் மிகுந்த குரலாக-ஜனநாயகத்தின் பாதுகாப்புக் குரலாக-அரசமைப்புச் சட்டத்தின் அரணாகச் செயல்பட்டு, நன்னம்பிக்கை ஒளியை நாட்டில் பாய்ச்சியிருக்கிறார்கள்” என்று எம்.பி.க்களை பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து, “நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையே இத்தனை ஆண்டு காலம் மறைத்து வைத்த துரோகத்தை மக்களவையில் டி.ஆர்.பாலு எடுத்துரைத்து, “ஒரு மாநில அரசின் சொல்லி வாதாடினார். தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டின் திட்டங்கள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என மக்களவையில் கனிமொழி எடுத்து வைத்த வாதங்கள், பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களவையில் நீண்ட வரலாற்றுப் பின்னணியுடனும், நூற்றாண்டுகாலத் தரவுகளுடனும் அடுக்கி வைத்த ஆ.ராசாவின் வாதம், ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்தது” என மக்களவையில் திமுக எம்.பி.க்களின் வாதங்களை பட்டியலிட்டவர், அவையில் குரல் கொடுப்பதுடன் அவர்களின் பணி முடிந்து விடுவதில்லை என்றும் அதன் மீதான தொடர் நடவடிக்கைகளை நாள்தோறும் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் கூறினார்.
கூட்டணி கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து, “சமூகக் கெடுதலைக் களைந்திட சளைக்காது உழைத்திடும் திருமாவளவன் ரயில்வே துறையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணிகள் வழங்க வேண்டும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார். ரவிக்குமார் எம்.பி.களுக்கான கடிதங்கள் இந்தியில் மட்டுமே வழங்கப்படுவதாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மதிமுக எம்.பி. அ.கணேசமூர்த்தி, தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து தீர்க்க வலியுறுத்தினார். பாரிவேந்தர் எம்.பி., பெரம்பலூர் இருப்புப் பாதைத் திட்டம் குறித்து கவனம் ஈர்த்திருக்கிறார். கொமதேக எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ், கோழிப் பண்ணைத் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்திட வற்புறுத்தியுள்ளார்” என்று ஒவ்வொன்றாக சொன்ன ஸ்டாலின், என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற திமுக மற்றும் தோழமைக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்கள் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், திராவிட இனத்தின் செழுமை மிகுந்த குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் பறிபோகும் வாய்ப்புகளைப் பாய்ந்து தடுத்திடவும், அவரது சங்கொலி டெல்லிப் பட்டினத்தில் எதிரொலிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொமுச சண்முகம், வில்சன் ஆகியோரின் பணிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.
வேலூர் தேர்தல் குறித்து தனது மடலில் நினைவுகூர்ந்துள்ள ஸ்டாலின், “வேலூர் கோட்டை எப்போதும் கழகத்தின் வெற்றிக் கோட்டை, இப்போதும் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில் பணியாற்ற வேண்டும்” என்று திமுகவினருக்கு வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: