

- அஞ்சல் துறை தேர்வுகள் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவிப்பு.
- ஜூலை 14ல் நடைபெற்ற தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெற்றன.
தபால் துறை தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளி செய்தனர். இதனால், அவை நிகழ்வுகள் முடங்கின. இதனால், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு பதில் அளித்துப் பேசினார்.
அப்போது, “இனி அஞ்சல் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.” எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் கார்டு (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு வினாத்தாள் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்தது. அத்துடன் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்று அறிவித்திருந்தது.
இனி முதல் தாளுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தரப்படும் என்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கடந்த ஜூலை 12ஆம் தேதி அறிவித்தது.
இதனையடுத்து ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெற்றன. இதனைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பின. நாடாளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக