வெள்ளி, 19 ஜூலை, 2019

கர்நாடகத்தில் உச்சகட்ட . குழப்பத்தின் பின்னணியில் சித்தராமையா ?

Veerakumar .. பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு, ஒருவேளை கலைந்தால், அதற்கு பாஜக தலைவர் எடியூரப்பாவைவிட, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாதான் காரணமாக இருக்கப்போகிறார். ஆச்சரியமாக இருந்தாலும், அதுதான் கள யதார்த்தம். கர்நாடக அரசியலில் சுவாரசிய மற்றும் எதிர்பாராத திருப்பமும் சித்தராமையாவை சுற்றிதான் சுழன்று வருகிறது. 2013ம் ஆண்டு நடந்த, கர்நாடக, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே உட்பட, அந்த கட்சியை சேர்ந்த, எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தபோதிலும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, காங்கிரசில் சேர்ந்து, 10 வருடங்கள் கூட ஆகாத நிலையிலும், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கினார் சோனியா காந்தி. .. முதல்வர் பதவிக்காகத்தான், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், சித்தராமையா. இப்போது அது நிறைவேறிவிட்டது என்ற பேச்சுக்கள், முனுமுனுப்புகள் அப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்தன. 
ஆனால், அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்ததால் 5 ஆண்டுகளும் சிக்கல் இன்றி காங்கிரஸ் ஆட்சி காலம் நிறைவடைந்தது.
ஆனால், 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் திருப்பு முனையாக அமைந்தது. கூட்டணி ஆட்சி கூட்டணி ஆட்சி பெரும்பான்மை பலம் பெற, 113 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 105 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக. ஆனால், காங்கிரசும், மஜதவும் இணைந்து ஆட்சியமைத்தன. 79 தொகுதிகள் வென்றிருந்தது காங்கிரஸ். ஆனால், 37 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக்கப்பட்டார். ஒருவேளை இப்படி ஒரு கூட்டணி அமையாவிட்டால் மஜத, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் என்ற யூகமே, காங்கிரஸ் தலைமை முடிவுக்கு காரணம். 
குமாரசாமி முதல்வரானது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவு என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டார். ஆனால் இந்த அரசு கவிழ வேண்டும் என்பதுதான் சித்தராமையாவின் அடி மனது ஆசை. இதற்கு காரணம், குமாரசாமி அவர் அப்பா தேவகவுடா ஆகியோருடன் சித்தராமையாவுக்கு ஜென்ம பகை. இதனால்தான், சித்தராமையா, மஜதவைவிட்டு காங்கிரசுக்கு வந்திருந்தார். 
லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டபோதிலும், அதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. லோக்சபா தேர்தல் முடியட்டும் அதன்பிறகு இறுக்கிப்பிடித்திருக்கும் கயிறை விட்டுவிடலாம் என்ற முடிவில் இருந்தார் சித்தராமையா. 
அதேபோலத்தான் இப்போதும் நடந்துள்ளது. நெருக்கமான எம்எல்ஏக்கள் நெருக்கமான எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களில் சுமார் 6 பேர் சித்தராமையாவின் வலதுகரமாக இருந்தவர்கள். 
அதிலும் நாகராஜ், பைரத்தி பசவராஜ் ஆகியோர்தான், சித்தராமையா அரசியலுக்கு சமீபகாலமாக பணம் சப்ளை செய்வோர் என கூறப்படுகிறது. ஆனால் அவர்களும் மும்பையில் உள்ளனர். இதெல்லாம் தேவகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
எனவே ஆட்சி கலைந்தால் அதற்கு காரணம் சித்தராமையாதான் என்ற பேச்சு கர்நாடக அரசியலில் கொடி கட்டி பறக்கிறது. ஆனால், இதன் முழு பலனை அடையப்போவது என்னவோ, பாஜகவும், எடியூரப்பாவும்தான்.

//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: