சனி, 7 ஏப்ரல், 2018

நடிகர்-நடிகைகள் சென்னையில் நாளை போராட்டம் ,, நடிகர்-நடிகைகள் 3 ஆயிரம் பேருக்கு சங்கம் அழைப்பு

maalaimalar :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் சென்னையில் நாளை போராட்டம் நடத்துகிறார்கள். இதில் தவறாமல் கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நடிகர்-நடிகைகள் 3 ஆயிரம் பேருக்கு நடிகர் சங்கம் அழைப்பு விடுத்து உள்ளது. சென்னை, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சியினரும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் சாலை மறியல், ரெயில் மறியல்களில் அணி, அணியாக பங்கேற்று கைதாகி வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை மூடி முழு அடைப்பிலும் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகம் ஸ்தம்பித்து மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.


உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகர்-நடிகைகள் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கண்டன மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். போராட்டத்தில் தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தினர் மற்றும் டைரக்டர்களும் கலந்துகொள்கிறார்கள். போராட்டத்தின் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

நடிகர்-நடிகைகள் போராட்டத்துக்காக வள்ளுவர் கோட்டம் அருகே பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: