செவ்வாய், 3 ஏப்ரல், 2018

ஸ்டாலின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

ஸ்டாலின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!மின்னம்பலம் :திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. நேற்றிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் அழைத்த மர்ம நபர், தான் ஸ்டாலின் வீட்டு முன்பு நின்றுகொண்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்குள் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குள்ளும் குண்டை வீசப்போவதாகவும் தெரிவித்து இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இந்தத் தகவல் உடனடியாக ஸ்டாலின் வீட்டின் அருகேயுள்ள காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்டாலின் வீடிருக்கும் சித்தரஞ்சன் சாலை பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. மேலும் ஸ்டாலின் இல்லத்தில் சோதனை நடத்தியபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோபாலபுரத்தில் இல்லத்தில் சோதனை நடத்தியபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் மிரட்டல் பொய்யானது என்று தெரியவந்தது.

மிரட்டல் வந்த எண்ணினை சோதனை செய்தபோது அந்த எண் காஞ்சிபுரம் பகுதியைக் காட்டியது. இதனையடுத்து மர்ம நபரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஸ்டாலின் இல்லம், கோபாலபுரம் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: