வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் ஆய்வு .. சுதந்திரமாக கருத்துக்களை கூறுமாறு வேண்டுகோள்!

மின்னம்பலம் : திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக திமுக நிர்வாகிகளுடன் மேற்கொள்ளவுள்ள ஆய்வுக்கூட்டம் சென்னையில் இன்று (பிப்ரவரி 1) தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவைச் சற்றே யோசிக்க வைத்துள்ளது. நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றாததே தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், சில கீழ்மட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. ‘மாவட்டச் செயலாளர்கள் பலரும் தேர்தல் பணி செய்யாமல் முடங்கிவிட்ட நிலையில் கீழ்மட்ட நிர்வாகிகளை நீக்குவதால் என்ன பலன்’ என்ற குரல் திமுகவில் பரவலாக எழுந்தது. எனவே கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் முடிவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளதால், அதற்குள் கட்சியில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்து வலுப்படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.
ஏனெனில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தலில் உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கும் என்பது ஸ்டாலினுக்குத் தெரியாமல் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசமும் ஸ்டாலினை யோசிக்க வைத்துள்ளது. எனவே, திமுகவில் மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ்மட்டம் நிர்வாகிகள் இடையே நிலவும் இடைவெளியைக் குறைத்து அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதற்காகத்தான் தற்போது நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று தொடங்கும் ஆய்வுக்கூட்டம் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆய்வுக்கூட்டத்தில் திமுகவின் அனைத்து மாவட்டக் கழகங்களிலும் உள்ள ஊராட்சிச் செயலாளர்கள் முதல் துணை அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் வரை அனைவரிடமும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்
பிப்ரவரி 1, 3 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும், பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்திக்கிறார். இதே போன்று 9, 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
14, 15, 16 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து பல மாவட்ட நிர்வாகிகளையும் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மார்ச் 20, 23ஆம் தேதிகளில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தனியே தன்னந்தனியே...
இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைவரும் தங்கள் கருத்தைச் சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலின் எண்ணுவதால் தனியாகவே ஆய்வை நடத்த அவர் உத்தேசித்துள்ளார். துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள்கூட ஸ்டாலினுடன் இருக்க மாட்டார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூட்டம் தொடங்கும்போது பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இருப்பார்கள். ஆனால், சம்பிரதாயமான தொடக்கத்துக்குப் பிறகு கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியையும் ஸ்டாலின் மட்டுமே தனியாகவே சந்தித்துப் பேச விரும்புகிறார்.
ஏனெனில், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் தனக்கு எதிரான கருத்துகள் இருந்தால்கூட தயக்கமின்றி முன் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்டாலின். அப்போது சீனியர் தலைவர்கள் இருந்தால் நிர்வாகிகளுக்குத் தயக்கம் ஏற்பட்டு, மென்று விழுங்கிவிடுவார்களோ என்று கருதுகிறார் ஸ்டாலின். அதனால், தனக்கும் கட்சியின் ஒவ்வொரு மட்ட நிர்வாகிகளுக்கு இடையேயான பிணைப்பு உறுதிப்பட வேண்டுமானால் அந்தத் தயக்கம் இருக்கக் கூடாது என்று கருதுகிறார் ஸ்டாலின். அதனால்தான் சீனியர்களிடம் இதை பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டாராம்.
செயல்தலைவர் என்றபோதும் இப்போது கட்சியின் தலைவராக இருப்பவர் ஸ்டாலின்தான். இந்த நிலையில் பல மாவட்டங்களில் ஸ்டாலின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற நிலைமை இருப்பதை தனக்கு வரும் தகவல்கள் மூலம் உணர்ந்திருக்கிறார் ஸ்டாலின். அந்த நிலைமையை உடைத்து, தான் திமுகவில் அனைவருக்கும் பொதுவானவர் என்ற நம்பிக்கையை கட்சியினரிடம் ஏற்படுத்த இந்த தனிப்பட்ட சந்திப்பே உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.
இதன்மூலம் தனது ஆக்கபூர்வமான அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார் ஸ்டாலின். இந்த ஆய்வுக்கூட்டத்துக்கு பின் திமுகவில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.