புதன், 31 ஜனவரி, 2018

மனித கழிவை அகற்றும் இயந்திரம்.... கேரளா மாணவர்கள் முயற்சி .

பண்டிகூட் ரோபோvikatan ஐஷ்வர்யா: கேரள முதல்வரிடம் பாராட்டு பெறும் நிறுவனம்குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுளாக வணங்கும் பெண்ணை இழிவாகப் பேசியதற்காக புரட்சி, போராட்டம், மன்னிப்பு, சோடா பாட்டில் என பல கோணங்களில் பிரச்னை வெடித்துச் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.உயிரற்ற ஒருவரின் மரியாதை சீர்குலைக்கப்பட்டு விட்டதாகப் போராடிக் கொண்டிருக்கும் அதேசமயம், மனிதக் கழிவுகளையும் குப்பைகளையும் உயிரோடு இருக்கும் சக மனிதரைக் கொண்டு அவரின் கரங்களால் அள்ளச்செய்து, கொடுமைக்குள்ளாக்கி அதைப்பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் கண்களை மூடியும் மூக்கைப் பொத்திக் கொண்டும் நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இதுபற்றி எவ்விதப் புரட்சியும் வெடிக்கவில்லை; அதற்காகப் போராட்டமும் நிகழவில்லை. 2014 - 2016-ம் காலகட்டத்தில் நமது நாட்டில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை மட்டும் 1,200. கடவுளாகப் போற்றப்படும் பெண்ணை இழிவு செய்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட மடத்தின் அதிபதி தமிழ்த்தாயை வாழ்த்தும்போது எழுந்து நின்றாரா? இல்லையா? என்பதைப் பற்றி காரசாரமாக விவாதிப்பதைக் காட்டிலும் இந்தத் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடிய, அதே சமயம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை எனலாம்.

'ஸ்மார்ட் சிட்டி' அதிகளவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில்தான்  மலம் உள்ளிட்ட கழிவுகளை கையால் அள்ளுவது, மனிதர்கள் செய்யும் தொழிலாக, அதிலும் ஒடுக்கப்பட்ட - குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்யும் தொழிலாக இருக்கிறது. இதற்கான தீர்வைக் காணும் வகையில், கேரள மாநிலம் குட்டிபுரத்தில் இருக்கும் எம்.ஈ.எஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர், குழிகளில் இறங்கிக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  'ஜென்ரோபாட்டிக்ஸ்' என்னும் நிறுவனத்தை திருவனந்தபுரத்தில் நடத்திவரும் இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து, 'பண்டிகூட்' எனப் பெயரிடப்பட்ட அந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளார்கள். தாங்கள் உருவாக்கிய ரோபோவிற்கு இந்தியக் கண்டுபிடிப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்ட இவர்கள், தற்போது அதற்கான சர்வதேச உரிமத்திற்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இதன் ஹைலைட்டாக இவர்களின் கண்டுபிடிப்பை அங்கீகரித்துள்ள கேரள அரசு, முதல்கட்டமாக 50 'பண்டிகூட்' ரோபோக்களை தயாரித்து வழங்க, அவர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ரோபோக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் 24 வயது சி.இ.ஓ, கோவிந்தைத் தொடர்புகொண்டோம்.
" 'பெங்களுரூவைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள், சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும்போது இறந்துபோனார்கள்' என்கிற செய்தி என் சிந்தனையை உறுத்திக் கொண்டிருந்தது. அதற்கு அறிவியல்ரீதியான தீர்வு தேவை என்றால் பொருட்செலவாகும். அதற்காக, மென்பொருள் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து பணம் சேர்த்தேன். கல்லூரி நண்பர்கள் நாங்கள் ஒன்பது பேர் சேர்ந்து முதற்கட்ட மாதிரி வடிவத்தை உருவாக்கினோம். அந்த வடிவத்தை மேம்பாடு செய்துதான் 'பண்டிகூட்' உருவாக்கப்பட்டது. வரும் ஃபிப்ரவரி மாதத்தில் முதற்கட்டமாக ஆட்கள் இறங்கும் கழிவுக் குழிக்குள் ரோபோக்களை இறக்கிப் பணிகளைத் தொடங்க இருக்கிறோம்" என்றார்.
யாரும் முன்னெடுக்காத பிரச்னையைக் கையிலெடுத்து, அதற்கான தீர்வுக்காக முயற்சித்துவரும் அந்த இளைஞர்கள் பட்டாளத்திற்கு வாழ்த்துகள். கூடவே அதனைத் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முன்வந்திருக்கும் கேரள அரசுக்கும் 'அப்ளாஸ்'. ரோபோ 'பண்டிக்கூட்' வெற்றி அடைந்தால் சாக்கடைக் குழியில் இறங்கும் பல மனிதர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படும்.
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்வு இனி வேண்டாம்...

கருத்துகள் இல்லை: