செவ்வாய், 30 ஜனவரி, 2018

ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: இரண்டு பேர் படுகாயம்; பயணிகள் அச்சம்

தினமலர் :திருவள்ளூர்-சென்னை மார்க்கத்தில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள்,  பட்டாகத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
திருவள்ளூர் சென்னை இடையே புறநகர் ரயில் சேவை உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். இதில் யார் பெரியவர் (ரூட் தல) என்ற போட்டி நடக்கிறது.
முன்பு பேருந்துகளில் (ரூட் தல) என்று மாணவர்கள் மோதிக்கொள்வார்கள். 'பஸ் டே' என்று சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பயணிகள் தான்.

இதே போல் சென்னை ஆவடி இடையே பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி சார்பில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஈடுபடுவது தொடர் கதையாகி தற்போது யார் 'ரூட் தல' என்ற மோதல் வரை இட்டுச் சென்றுள்ளது.

இன்று காலை சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் ரவுடிகள் போல் பயங்கர ஆயுதங்களை வைத்து ரயில் பயணிகளை அச்சுறுத்தியபடி மாணவர்கள் பயணம் செய்தனர்.
திடீரென ரயில் பெட்டியிலிருந்து பிளாட்பாரத்தில் குதித்த மாணவர்கள் நீளமான கத்தி, அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதனால் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் அங்கும் இங்கும் வலம் வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் சிலருக்கு வெட்டு விழுந்தது. இதில் பீட்டர் என்கிற மாணவரும், காளிதாஸ் என்கிற மாணவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் தெரியவந்துள்ளது. மாணவர் பீட்டரும், காளிதாஸும் மாநிலக்கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முன்பெல்லாம் கைகளால் அடித்துக் கொள்ளும் மாணவர்கள் சமீப காலமாக கத்தியைக் கொண்டு மோதுகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ஓடும் ரயிலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் மாநில கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ஆனாலும்,  இந்த இரு கல்லூரி மாணவர்களின் மோதல் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி இதே தடத்தில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தரையில் தேய்த்தப்படி சென்றனர்.
இதனை சக ரயில் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ காட்சிகளை வைத்து 4 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று அதே மார்க்கத்தில் பட்டரவாக்கத்தில் மோதல் நடந்துள்ளது. மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொள்வது ரயில் பயணத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவர்கள் தங்களுக்குள் அரிவாளால் வெட்டிக்கொண்டனர்
போலீஸார் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஸ்வாதியின் படுகொலைக்குப் பின்னர் எழுந்தது. ஆனாலும் இன்று வரை அது அமல்படுத்தப்படவே இல்லை

கருத்துகள் இல்லை: