சனி, 3 பிப்ரவரி, 2018

பட்ஜெட் அதிர்ச்சி .. பங்கு சந்தை கடும் சரிவு ... முதலீட்டாளர்கள் 4.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

மத்திய பட்ஜெட்டில் எதிரொலியாக மும்பைப் பங்குச்சந்தை கடந்த 3 ஆண்டுகளுக்குபின் மிகப்பெரிய வீழ்ச்சியைச் இன்று சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.4.6 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளில் இழப்பு ஏற்பட்டது.
tamilthehindu :2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பங்குச்சந்தையில் நீண்ட காலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரியான எல்டிசிஜியை அறிமுகப்படுத்தினார். இந்த வரியின் அறிமுகமாவதன் தாக்கம் பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியதில் இருந்தே காண முடிந்தது.
காலையில் இருந்த சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே அதிகட்சமாக 900 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்த சரிவு வர்த்தகம் முடியும் வரை மாறவில்லை. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக பங்குகளை விற்பனை செய்து, பணத்தை திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். இதனால், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை திடீர் வீழச்சியைச் சந்தித்தது.
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 839.91 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 35,066.75 புள்ளிகளில் முடிந்தது. ஏற்குறைய 2.34 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,624 புள்ளிகள் ஏற்பட்ட சரிவுக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.
தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் 256.30 புள்ளிகள் சரிந்து, 10,760.60 புள்ளிகளில் நிலை கொண்டது.
மும்பையில் பங்குச்சந்தை நிர்ணயிக்கும் 30 நிறுவனங்களின் பங்குக்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழச்சியை சந்தித்தன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல் பங்குகள் கடும்சரிவைச் சந்தித்தன. இந்த சரிவின் மூலம் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரு நாளில் ரூ.4.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: