
ஆண்டுதோறும் ஹஜ் பயணிகளுக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களை இந்திய அரசு செலவிடுகிறது என்று நம்பும் இந்துக்கள், முஸ்லிம்கள் மீது அதிக வெறுப்பு கொள்கின்றனர்.
ஆனால் இதன் உண்மை நிலை வேறாகும். ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களைச் சுரண்டுகிறது என்பதே உண்மையாகும்.
இதுபற்றி விவரமாக நாம் அறிந்து கொள்வது மட்டுமன்றி முஸ்லிமல்லாத மக்கள் கவனத்துக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.
மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
உதாரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செய்ய சவுதி அரசால் அனுமதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 1,36,000 ஆகும். (ஒரு லட்சத்தி முப்பத்து ஆறாயிரம்)
இதில் ஒரு லட்சம் பயணிகள் ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பப்படுவார்கள்.
மீதி 36 ஆயிரம் பயணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். இதற்கும், அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. மானியம் என்ற பேச்சு இதில் எழவில்லை.
அரசின் சார்பில் ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்வோருக்குத்தான் மானியம் வழங்குவதாக பிரசாரம் செய்யப்படுகிறது.
இது குறித்துத்தான் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்வோர் அதற்கான கட்டணமாக 1.80,000 (ஒரு லட்சத்து என்பதாயிரம்) ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணம் எதற்காகப் பெறப்படுகிறது?
சவுதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட ஹாஜிகளின் செலவுகளுக்காக 34 ஆயிரத்தை ஜித்தாவில் இறங்கிய உடன் ஹாஜிகளின் கையில் தருவார்கள். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை 1,46,000 (ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம்) ரூபாய்.
விமானத்துக்கான அதிகப்பட்சக் கட்டணம் : 25,000
மக்காவில் தங்கும் வாடகை : 50,000
மதீனாவில் தங்கும் கட்டணம் : 20,000
மக்காவில் ஹஜ் வழிகாட்டி கட்டணம், வாகனங்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லுதல் கட்டணம் வகைக்காக 25.000
ஆக ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் கமிட்டி மூலம் செலவிடும் தொகை 1,20,000 ரூபாய்தான் ஆகிறது.
அதாவது ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் மத்திய அரசு அடிக்கும் கொள்ளை சுமார் 25 ஆயிரம் ரூபாய். இது தவிர விமானக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் லாபம் வேறு உள்ளது.
இதில் அரசாங்கத்தின் மானியத்துக்கு எந்த வேலையும் இல்லை.
ஹஜ் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் 25 முதல் முப்பதாயிரம் ரூபாய் மிச்சமாகும்.
அப்படியானால் மானியம் என்ற பிரச்னை எப்படி வருகின்றது?
ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள், இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவுதி அரசுக்குச் சொந்தமான சவுதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஏர் இந்தியாவிடம் போதிய விமானம் இல்லாவிட்டால் பிற நாட்டு விமானங்களை அடிமாட்டு கட்டணத்துக்கு ஏர் இந்தியா வாடகைக்கு எடுக்கும். அதை ஏர் இந்தியா பெயரில் இயக்கும். அதில்தான் பயணிக்க வேண்டும்.
ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதியில்லை.
அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாயை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது.
மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகப் பொய்ப் பிரசாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள்.
ஏர் இந்தியாவின் வருமானத்தைப் பெருக்க ஒவ்வொரு ஹாஜியிடமிருந்தும் கூடுதலாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை ஏமாற்றிப் பறித்துக்கொண்டு மானியம் வழங்குவதாகக் கூறுவது பச்சை அயோக்கியத்தனமாகும்.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களிடம் இப்படிக் கொள்ளையடிக்கும் நாடுகள் உலகில் எங்குமே இருக்காது. கொள்ளையும் அடித்து விட்டு மானியம் அளிப்பதாகக் கூறும் நாடுகளும் உலகில் இருக்காது.
முஸ்லிம்களில் வசதி படைத்த மக்கள்தான் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். அரசின் மூலம் பயண வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் எனச் செலவிட்டு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.
அனைத்து மக்களுக்குமான வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையும் இல்லை என்பதை இதிலிருந்தே அறியலாம். இந்தக் கேடுகெட்ட மானியத்தை முஸ்லிம்கள் கேட்கவும் இல்லை.
எனவே இந்தப் போலி ஹஜ் மானியத்தை ஒழித்துக் கட்டினால் அது முஸ்லிம்களுக்கு நன்மைதான்.
ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்ற கொள்ளை அடிக்கும் கொள்கையைக் கைவிட்டு, ஹாஜிகள் தமக்கு விருப்பமான எந்த விமான சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மானியத்தை நிறுத்தட்டும். அப்படிச் செய்தால் முஸ்லிம்கள் அதைப் பெரிதும் வரவேற்பார்கள்.
டிரான்சிட் முறையில் பயணித்தால் 15 ஆயிரம் கட்டணத்தில் ஜித்தா போக முடியும். பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தால் இன்னும் குறைந்த கட்டணத்தில் புனிதப் பயணம் செய்து ஒவ்வொரு ஹாஜியும் முப்பதாயிரத்துக்கு மேல் மிச்சப்படுத்த முடியும்.
போலி ஹஜ் மானியம் ஒழிக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஹாஜிகளின் பணத்தைக் கொல்லைப் புறமாக அரசு சுரண்டுவதையும் கண்டிக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக