சனி, 20 ஜனவரி, 2018

2ஜி சாகா: விரைவில் தமிழில் வரும்! ராசா அறிவிப்பு

2ஜி சாகா: விரைவில் தமிழில் வரும்!மின்னம்பலம் :2ஜி வழக்கு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புத்தகமான, ‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ என்ற நூலை இன்று (ஜனவரி 20) மாலை டெல்லியில் ஆ.ராசா வெளியிட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பெற்றுக்கொண்டார். டெல்லியில் இருக்கும் ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் நடந்த விழாவில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தக வெளியீட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “2ஜி விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் பிரதமருக்குத் தவறான தகவல் தரப்படது. தவறான தகவல்களால் அவர் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் என் கருத்து. நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். கீழமை நீதிமன்றத்தில்நான் எப்படி நடந்துகொண்டேன் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அன்று உச்ச நீதிமன்றத்துக்கும் போதிய தகவல்களைக் கொடுக்காமல் மத்திய அரசு தவறாக வழி நடத்தப்பட்டது.

நிதி அமைச்சகத்தின் ஆலோசனை ராசாவால் மறுதலிக்கப்பட்டது என்று என் மேல் குற்றம் சாட்டப்பட்டது. நான் நிறைந்த நீதிமன்றத்திலேயே இதுபற்றிக் கேட்டேன். அப்படியென்றால் நிதி அமைச்சரிடம் ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்குங்கள் என்றேன். சிதம்பரமும் வாய் திறக்கவில்லை, சிபிஐயும் வாய் திறக்கவில்லை. 2ஜி வழக்கு குறித்த முந்தைய மன்மோகன் அரசின் மௌனமே அந்த அரசை வீழ்த்தியது’’ என்ற ஆ.ராசா முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த விவகாரத்தைப் பெரிதாக்கிய வினோத் ராய் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, “வினோத் ராய் தான் வகித்த பதவிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார். இதற்காக நியாயமாகப் பார்த்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் அரசியல் அமைப்புச் சட்டப் பாதுகாப்பில் இருக்கிறார். ஆங்கிலேய சட்டங்களின்படி நம் நாட்டிலும், ‘அரசன் தவறு செய்ய மாட்டான்’ என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசனே தவறு செய்தாலும் என்ன நடவடிக்கை என்பது இல்லை. அதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழியில்லை என்றால்கூட, இந்த தேசத்தின் நலன் கருதி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்.
இதற்கு என்ன பின்புலம்? கார்ப்பரேட் யுத்தமா, நேர்மையான மன்மோகன் சிங் அரசு மீண்டும் வரக் கூடாது என்ற அரசியல் சதியா, உள்நாட்டு வெளிநாட்டு சதி இருக்கிறதா என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும். எங்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களோடு பேசி அவரது அனுமதி பெற்றுக் கொண்டு இதுபற்றி நானே குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவேன்.
கலைஞரும் செயல் தலைவரும் இல்லை என்றால் இந்த ராசாவை இங்கே பார்த்திருக்க முடியாது. அவர்களுக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களைக் கேட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்த புத்தகம் தமிழில் எப்போது வரும் என்ற கேள்விக்கு, “தேச நலன் கருதி பொது நலன் கருதி நான் இந்தப் புத்தகத்தில் ஒரு சதவிகிதத்தை தவிர மீதி அனைத்தையும் எழுதிவிட்டேன். தமிழில் புத்தகத்தை விரைவில் ஸ்டாலின் வெளியிடுவார்’’ என்று தெரிவித்தார் ஆ.ராசா.
இந்த புத்தகத்தால் திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான உறவில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, “அரசியல் உறவுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் சம்பந்தம் இல்லை’’ என்று மறுத்தார் ஆ.ராசா

கருத்துகள் இல்லை: