செவ்வாய், 6 செப்டம்பர், 2016

கருப்பண்ணனை நீக்கும் வரை போராட்டம்: விவசாயிகள் சங்கம்!


விவசாயிகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக இருந்துகொண்டு, வங்கியில் முதலீடு செய்து, வட்டிக்கு விடும் தொழிலை செய்து வருகின்றனர்’ என்றும் ‘விவசாயிகள் யாரும் வறுமையில் இல்லை. விளம்பரத்துக்காக வீதியில் இறங்கி போராடி ஊரை ஏமாற்றி வருகிறார்கள்’ என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பேசியதற்கு, விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருப்பண்ணனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வீட்டில் இருப்பவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அதை கொச்சைப்படுத்தி பேசுவது நியாயமல்ல.

ஈரோட்டில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, இரண்டு பொறியியல் கல்லூரிகள் நடத்திவரும் அமைச்சர் கருப்பண்ணன், விவசாயிகளின் வேதனை அறிந்திருந்தால் இதுபோன்று பேசி இருக்க மாட்டார். நாகரீகமற்ற முறையில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் நடைபெறும்” அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் கூறுகையில், “வீட்டில் இருப்பவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அதை கொச்சைப்படுத்தி பேசுவது நியாயமல்ல. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் நிதானமாக பேச வேண்டும். நிதானம் தவறி பேசிய கருப்பண்ணனை பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: