வியாழன், 8 செப்டம்பர், 2016

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை ஆட்சியர் மகேஸ்வரி!


தமிழகத்தில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்குமுன் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு இயக்குநர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். நிதித்துறை துணைச் செயலாளர் பிரஷாந்த் எம்.வத்நேர், திருவண்ணாமலை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவியில் இருந்த எஸ்.பழனி வருவாய் துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் இணைச் செயலாளர் பி.மகேஸ்வரி, சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் ஆணையர் எல்.சுப்பிரமணியன், விழுப்புரம் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பொறுப்பில் இருந்து திருமதி லட்சுமி விடுவிக்கப்பட்டுள்ளார். லால்குடி ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கும்பகோணம் துணை ஆட்சியர் மந்திரி கோவிந்த ராவ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி துணை ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராவ், சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்பட்டார்’ என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் அதிரடி மாற்றம் இன்னும் தொடரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  minnambalam.com

கருத்துகள் இல்லை: