புதன், 7 செப்டம்பர், 2016

குஜராத் கிட்னி விற்பனையில் சாதனை.. வாடகை தாய் விற்பனையிலும் முன்னணியில் .. ஒளிர்கிறது?

மக்களின் வறுமையை பயன்படுத்தி மும்பை ஹிரநந்தனி, டெல்லி அப்பல்லோ கார்ப்பரேட் மருத்துவமனைகள் நடத்திவரும் கிட்னி திருட்டு குறித்து வினவில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இக்கிட்னி திருட்டுக் கும்பல் குஜராத்தை மையப்படுத்தி இயங்குவதோடு, இம்மாநிலத்திலிருந்து கணிசமானவர்கள் கிட்னி விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. குஜராத்தின் பண்டோனி கிராமம் – 13 பேர்கள் கிட்னியை விற்றிருக்கின்றனர். 
ல்லாயிரம் கோடி கடனை வாங்கி ஏப்பம் விட்ட மல்லையாக்கள் வாழ்கின்ற இதே நாட்டில்தான், 30,000 ரூபாய்க்காகவும், கான்கிரிட் சுவருக்காகவும், அடுத்த வேளை உணவிற்காகவும் தங்கள் உடல் உறுப்புகளை விற்போரும் வாழ்கின்றனர்.  இது 2014-ல் ஒளிர்கிறது குஜராத் என்கின்ற மாயையை தனது திருவாய் மலர கொக்கரித்த மோடியின் வீழ்ச்சி மட்டுமல்ல. தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ஆகியவற்றால் நாசமாக்கப்பட்ட விவசாயம், சிறு தொழில்கள், வேலையின்மை, முதலியன தோற்றுவிக்கும் வறுமைதான் மக்களை தங்கள் சொந்த இடத்தில் கூட வாழமுடியாதவர்களாய் மாற்றியுள்ளது.
குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹிரநந்தனி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவித் கான் என்ற தரகர் மூலம் தான் இது நடந்துள்ளது.
கிட்னி விற்க தயாராக இருப்பவர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்க தொகை என்று அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்று இக்குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகத்தில் ஆரம்பித்து கிட்னி விற்பவர் வரை மிகப் பிரம்மாண்டமான ஒரு வலைப்பின்னல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இக்கிராமத்தில் கிட்னி விற்று வாழ்க்கை நடத்திவரும் மக்களிடம் கள ஆய்வு நடத்தி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிரநந்தனி கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி எடுக்கப்படவிருந்த ஷோபனா தாகூர், பண்டோலி கிராமத்தில் இருந்து 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள பிப்லவ் கிராமத்தை சேர்ந்தவர் தான்.
ஜாவித் கான் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவருக்கும் கிடைத்த முதல் நபர் ரஃபிக் அஹமத். இவர் தன் கிட்னியை 2.3 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். பின்னர் இவர் தனக்கு தெரிந்தவர்களை இவ்வலைபின்னலுக்குள் கொண்டு வர உதவியாய் இருந்துள்ளார்.
தற்போது ரஃபிக் அஹமது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரது மனைவி ஜாகீதா, “நாங்கள் எங்கள் மகளின் திருமணத்திற்காக வாங்கிய 50,000 ரூபாய் கடனை அடைப்பதற்கு தான் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர் தனது கிட்னியை விற்றார்” என்கிறார்.
  • அமீன் மாலீக் : வயது 27  தொழில் : விவசாயம்
    கிட்னி விற்ற தேதி : பிப்ரவரி, 16 2016  பணம் : 1.5 இலட்சம் ரூபாய்
salma malek
கிட்னியை பறிகொடுத்தவரது மனைவி சல்மா மாலெக்
பண்டோனியில் வசித்து வரும் 27 வயது நிரம்பிய அமீன் மாலீக் கூறுகையில் ”அஹ்மத் தான் என்னை டெல்லி வரவழைத்தார், பின் நான் அங்கிருந்து 40 கி.மீ தொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டேன். பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. காலையில் கண் விழித்து பார்க்கையில் ஜுஸை கையில் கொடுத்தார்கள். எனது கிட்னி ஒன்றை அவர்கள் எடுத்திருந்தனர்” என்றார்.
மேலும், “மூன்று நாட்கள் கழித்து எனக்கு ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்க்கையில் அதில் 1.8 இலட்சம் ரூபாய் பணம் இருந்தது. நான் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூலிக்கு வேலை பார்ப்பவன். இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததும் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தேன். நான் அந்த பணத்தை வைத்து மூன்று எருமை மாடுகள் வாங்கி பால் வியாபரம் செய்து வந்தேன். ஆனால் வாங்கிய மூன்றே மாதத்தில் இரண்டு மாடுகள் இறந்து விட்டன. மீண்டும் எனது வாழ்க்கை பழைய வறுமை நிலைக்கே திரும்பியது.
நான் ரஃபிக்குக்கு பாடம் புகுட்ட நினைத்தேன், ஏனென்றால் அவன் அப்பாவி மக்கள் வாழ்க்கையில் பணத்திற்காக விளையாடிக் கொண்டிருக்கிறான். நான் கேள்விப்பட்டவரை அறுவை சிகிச்சை மூலம் உறுப்பைப் பெற்றவர், 20 இலட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் எங்களுக்கு கொடுத்தது அதில் கால் பங்கு கூட இல்லை. எனவே நான் இது தொடர்பாக பெட்டால்டு போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்” என்றார்.
  • ஹர்ஷத் சோலன்கி : வயது 24 தொழில் : விவசாயம்
    கிட்னி விற்ற தேதி : ஆகஸ்ட், 2015 பணம் : 2.50 இலட்சம் ரூபாய்
24 வயது நிரம்பிய ஹர்ஷத் சோலன்கி கூறுகையில், ”நான் அறுவை சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டேன், இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் 2.5 இலட்சம் பெற்றேன். இந்த அரசாங்கங்கள் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. குழந்தைகள் 14 வயது நிரம்பியவுடன் கட்டாயமாக விவசாயம் அல்லது கூலி வேலைக்கு செல்ல வேண்டும், என்பதே இங்குள்ள பொது விதி. இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நாங்கள் உணவில்லாமல் வாழ்ந்ததுண்டு.
நாங்கள் 10*10 அடி உள்ள மண் குடிசையில் வாழ்ந்து வந்தோம் மின்சாரம், கழிப்பறை கிடையாது. அவ்வளவு ஏன் எங்கள் வீட்டிற்கு கதவு கூட கிடையாது. மழையில் இருந்து தப்பிக்க நெகிழி (பாலிதீன்) தாள்களைதான் கூரையாக போர்த்தியுள்ளோம். நானும் எனது குழந்தைகளும் எவ்வாறு இங்கு வாழ்வது? எனவே, பெற்ற பணத்தில் எனது திருமணத்திற்காக என் தந்தை வாங்கியிருந்த 30,000 ரூபாய் கடனை செலுத்தினேன், என் தந்தையின் மருத்துவச் செலவிற்கான செலவு போக, மீதம் இருந்த 1 இலட்சத்தை வைப்பாக வங்கியில் செலுத்தினேன்”, என்றார்.
  • கனுபாய் கொகெல் : வயது 37 தொழில் : விவசாயம்
    கிட்னி விற்ற தேதி : நவம்பர், 2015 டெல்லி பணம் : 2.30 இலட்சம் ரூபாய்
hemaben gohel's kin
கிட்னியைப் பறிகொடுத்தவரது உறவினர் – ஹேமாபென் கோகெல்
”எங்கள் கிராமத்தை சேர்ந்த முகேஷ் டார்ஜி என்பவர் தான் எனக்கு இப்படி ஒரு வழி இருப்பதை சொன்னார். அவருக்கு கிட்னியில் கல் இருந்ததால் அவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் என்னை அறிமுகம் செய்து வைத்து, அதன் மூலம் 25,000 பெற்றார்.
எனது வருமானம் ஒரு நாளைக்கு 80 முதல் 100 ரூபாய். எனக்கு இரண்டு மகன்கள். எங்கள் வீடு மண் வீடாக இருப்பதால் எங்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. எனவே எங்கள் வீட்டை கான்கிரீட் வீடாக்க நான் இதற்கு ஒப்புக்கொண்டேன்”
___________________
ல்லாயிரம் கோடி கடனை வாங்கி ஏப்பம் விட்ட மல்லையாக்கள் வாழ்கின்ற இதே நாட்டில்தான், 30,000 ரூபாய்க்காகவும், கான்கிரிட் சுவருக்காகவும், அடுத்த வேளை உணவிற்காகவும் தங்கள் உடல் உறுப்புகளை விற்போரும் வாழ்கின்றனர்.  இது 2014-ல் ஒளிர்கிறது குஜராத் என்கின்ற மாயையை தனது திருவாய் மலர கொக்கரித்த மோடியின் வீழ்ச்சி மட்டுமல்ல. தனியார்மயம், தாரளமயம், உலகமயம் ஆகியவற்றால் நாசமாக்கப்பட்ட விவசாயம், சிறு தொழில்கள், வேலையின்மை, முதலியன தோற்றுவிக்கும் வறுமைதான் மக்களை தங்கள் சொந்த இடத்தில் கூட வாழமுடியாதவர்களாய் மாற்றியுள்ளது.
பண்டோனி கிராமம் குறித்த வீடியோ: நன்றி : First Post வினவு.com

கருத்துகள் இல்லை: