புதன், 18 மார்ச், 2015

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு?

comedy7வே.மதிமாறன்: பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும்.
நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது?
பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடியபோது தவிலும் நாதஸ்வரமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பார்ப்பனர்கள் பரதநாட்டியத்தைக் கைபற்றிய பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் நாதஸ்வரத்தையும் தவிலையும் அப்புறப்படுத்தியதுதான்.
அதே தாளம், ராகம், அதே ஏழு சுவரங்கள் அப்படியே எல்லாத் தரமும் இருந்தும் ஏன் அப்புறப்படுத்தினார்கள்?
கர்நாடக சங்கீத அம்சங்கள் முழுமையாக நிறைந்த நாதஸ்வரத்தையும் தவிலையும் பார்ப்பனர்கள் தீவிரமாக ரசிப்பார்களே தவிர, ஒரு போதும் அதை வாசிக்க மாட்டார்கள்.

இவை இரண்டும் கல்யாண ஊர்வலம், சாமி ஊர்வலம் என்று தெருக்களிலும் வாசித்து எளிய மக்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பதினாலும், இரண்டையும் வாசிப்பதற்கு அதிகமான உடல் உழைப்பும், சக்தியும் செலவழிக்க வேண்டும் என்ற இன்னொரு முக்கியக் காரணமும்.
செஸ், டென்னிஸ், கிரிக்கெட் விளையாடுகிறவர்கள்கள் ஏன் கால்பந்தும், கபடியும் விளையாட வருவதில்லை? என்பதற்கு என்ன விடையோ அதே தான் இதற்கும்.
இந்தச் சூழலில், தில்லானா மோகனாம்பாளில் பரதநாட்டியத்திற்கு இணையாக நாதஸ்வரத்தையும் தவிலையும் முன்னுறுத்தி சிறந்த படத்தைத் தந்ததில் இருக்கிறது, ஏ.பி. நாகராஜனின் அரசியல் கண்ணோட்டம்.
பரத நாட்டியம், கர்நாடக இசையில் பார்ப்பனர்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தபோதும்; தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி குருப், பத்மினி குருப் இரண்டிலும் ஒரு பார்ப்பனக் கதாபாத்திரம்கூடக் காட்டாமல்
படத்தில் தொடர்ந்து சிண்டு முடித்து வில்லத்தனம் செய்கிற ‘வைத்தி’ கதாபாத்திரத்தை ஒரு பார்ப்பனராக அதுவும் ஒரு பார்ப்பனரையே நடிக்க வைத்துக் காட்டியதிலும் இருக்கிறது, இயக்குநர் ஏ.பி. நாகராஜனிடம் பெரியாரின் தாக்கம்.
பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப் புறக்கணித்தவர்களிடமும் எதிர்த்தவர்களிடமும் கூட ஒளியைப்போல் ஊடுறுவினார் என்பதற்குத் தில்லானா மோகனாம்பாள் படமும் சாட்சி  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: