புதன், 18 மார்ச், 2015

கனிமொழியை பேசவிடாமல் குரியனிடம் வாங்கி கட்டிய அ.தி.மு.க எம்பிக்கள் .

பெரும்பான்மை உள்ளது என்பதற்காக, மற்றவர்கள் மீது, அதிகாரம் செலுத்தலாம் என, அ.தி.மு.க., நினைத்தால், அது நடக்காது. கனிமொழி, இந்த சபையின் உறுப்பினர் என்பதை, மறந்து விடாதீர்கள்.” என்று, துணைத் தலைவர் குரியன் சத்தம் போட்ட தால், ராஜ்யசபாவில் பரபரப்பு எழுந்தது. ராஜ்யசபாவில் நேற்று, கனிமொழி பேசுகையில், "தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை, செயல்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இத்திட்டத்தால், மண் வளமும், நீர் வளமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலுக்கும், பாதிப்பு ஏற்படும்,” என, பேசிக் கொண்டிருந்தபோதே, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் எழுந்து கூச்சலிட துவங்கினர். கனிமொழியை பேச அனுமதிக்காமல், குறுக்கிட்டு, 'இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியதே, தி.மு.க., ஆட்சியில் தான்' என்று, குரல் கொடுத்தபடி, அமளி யில் ஈடுபட்டனர். அதற்கு கனிமொழி, "மாநில அரசு உட்பட, யாரையும், நான் விமர்சிக்கவில்லை. என் பேச்சில் குறுக்கீடு செய்தால் எப்படி...” என, வாதிட்டார். ஆனாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியை தொடரவே, கோபமடைந்த குரியன், "நிறுத்துங்கள். இது போல, நடந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக, ஏதாவது பேசினால், அதை நானே நீக்குகிறேன்,” என, சத்தம் போட்டார்.

இதையடுத்து, கனிமொழி, தொடர்ந்து பேசி முடித்தார். உடனே, மீண்டும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர். தாங்களும் பேச வேண்டுமென பிடிவாதம் காட்டவே, சபையில் கூச்சல் அதிகமானது. ஒரு கட்டத்தில், அ.தி.மு.க., கட்சித் தலைவர், இருக்கையை விட்டு எழுந்து, தன்னை நோக்கி முன்னேறியதை பார்த்த குரியன், "ஜீரோ நேரத்தில், ஒருவர் பேசுவதில் உடன்பாடு இல்லை எனில், அது குறித்து பேசுவதற்கு, தனியாக நோட்டீஸ் கொடுத்து, அனுமதி பெற்று, அதன்பிறகே பேச முடியும்,” என்றார். அப்போதும் ரகளை நீடிக்கவே, கடுமையாக வாதிட்டு களைத்துப்போன குரியன், கடைசியில், வேறு வழியின்றி, தமிழில், "நோட்டீஸ் கொடுக்க்கூம்.. நோட்டீஸ் கொடுக்க்கூம்..” என்று, சிரித்தபடி கூறி, "எக்காரணம் கொண்டும் பேச அனுமதிக்க முடியாது,” என்று கூறிவிட்டார். இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சபையை விட்டு, வெளிநடப்பு செய்ய நேர்ந்தது.

- நமது டில்லி நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: