வியாழன், 25 டிசம்பர், 2014

வளர்ச்சி... வளர்ச்சி என்று பேசிக்கொண்டேகாவிப்பாதையில் பயணிக்கும் மோடி!

வ.மணிகண்டன் (எழுத்தாளர்) :
மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள்.


‘அப்படினா, சட்டம் Anti conversion Law கொண்டு வந்துடலாம். நீங்களும் மாற்ற வேண்டாம். நாங்களும் மாற்ற வேண்டாம்’ என்கிறார்கள் பரிவார் கூட்டத்தினர், இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்ததைப் போல! ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. உள்ளிட்ட இன்னபிற இந்துத்துவ அமைப்புகள் வெகுகாலமாகக் கேட்டுக் கொண்டிருந்த சட்டம்தான் இது.

இங்கே, ஆட்சியும் அதிகாரமும் கைக்கு வரும்போது, தத்தமது கொள்கைகளை அமல்படுத்துவது என்பது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்தக் கொள்கைகள் கொடுமையானதாக இருந்தாலும், வெகுஜனத்தை பாதிக்காத வரையில், நாட்டின் அமைதியைக் குலைக்காத வரையில் பிரச்னை இல்லை. ஆனால், பிரச்னை வெடிக்க வேண்டும் என்பதற்காகவே கொள்கை என்கிற பெயரில் கொடுமைகளை மட்டுமே அரங்கேற்ற நினைத்தால்?

இந்தக் கொடுமைகள் காலங்காலமாக நடக்காமல் இல்லை. என்ன, காங்கிரஸ் காலத்தில் சற்று நிதானமாகச் செய்தார்கள். பி.ஜே.பி. காலத்தில் வீறுகொண்டு செய்கிறார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைக் கேட்டால் நேரு, காந்தியைத்தான் சொல்வோம். இவர்களைத் தவிர, மற்ற அனைவரையுமே மறந்துவிட்டோம். இல்லையில்லை, மறக்கடிப்பட்டோம். சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட எழுபது ஆண்டு காலமாகப் போகிறது. இந்த எழுபது ஆண்டு காலத்தில் சுதந்திர வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆளும்வர்க்கத்துக்குத் தேவையானபடி திரிக்கப்பட்டது என்பதுதான் நிதர்சனம். இப்படி சிறுகச்சிறுக செய்யப்பட்ட திரிபுகளை, தற்போது ஆறே மாதத்தில் தனக்கு வாகாகத் திரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது பி.ஜே.பி. அரசு.

இனி, ஆசிரியர் தினம், குரு உத்சவ் என்று அழைக்கப்படும் என அவசர அவசரமாக அறிவித்தார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களால் ‘இது ஒன்றும் கட்டாயமில்லை’ என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்வாங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமும் இந்திரா காந்தியின் மறைவு தினமும் ஒரே நாளில் வருகிறது. காலங்காலமாக பட்டேல் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்று சொல்லி, இந்த வருடம் அவருடைய பிறந்த நாளன்று ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை’ கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர், இந்திரா மறைந்த தினம் என்பதை மறைத்துவிட்டார். காங்கிரஸார் கதறிக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கதறல் அடங்குவதற்குள்ளாகவே ஏசு பிறந்த நாளிலேயே வாஜ்பாய் பிறந்த தினம் வந்துவிட்டது. இதை ‘நல்லாட்சி தினம்' என்று அறிவித்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கும் என்று செய்திகள் கசிந்தன. எதிர்ப்பு பலமாக ஒலிக்கவே, ‘சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா’ என்கிற ரீதியில் ‘அப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் அன்றைய தினம் தங்களுடைய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் அதிகாரிகள் அவர்களோடு இருப்பார்கள். மந்திரிகள் நல்லாட்சி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்கள்.

இதுவரையிலும் அரசியல் அல்லது மத ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த தினங்கள் ஒவ்வொன்றிலும் வரிசையாக வேறொரு அஜெண்டாவைப் புகுத்திக் கொண்டிருப்பது நிச்சயமாக தற்செயலானது இல்லை. இதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. தங்களின் கொள்கைகளையும் விருப்பங்களையும் வரலாறாக மாற்றும் ஆழமான ஆசை இருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகான ஒவ்வொரு காலத்தையும் ஏதாவதொரு புரட்சியை வைத்து அடையாளப்படுத்துவார்கள். வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி மாதிரி இப்பொழுது காவிப்புரட்சி நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் என எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு காவி அரசியலை அடையாளப்படுத்திவிட முடிகிறது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் நிறைவுற்றிருக்கின்றன. அதற்குள் எவ்வளவு நுண்ணரசியல்... எவ்வளவு மாறுதல்கள்? இன்னமும் நான்கரை ஆண்டுகாலம் இருக்கிறது. எவ்வளவோ நடக்கக் கூடும்.

மதரீதியிலான அரசியலை கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதும் குற்றம்; அதே மதத்தை வைத்து அரசியலை நடத்துவதும் குற்றம். ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லி, காங்கிரஸின் கேலிக்கூத்துகளையெல்லாம் அம்பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி, அதே காங்கிரஸ் பாணியில் லாவணி அரசியல் நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் உன்னிப்பாகவே கவனித்துக் கொண்டுள்ளனர்.

வளர்ச்சி... வளர்ச்சி என்று பேசிக்கொண்டே, வேறு பாதையில் பயணிக்கும் உங்களின் அஜெண்டாக்களில் நீங்கள் வென்றுவிடவும் கூடும். இதற்காக லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களையும், கொண்டாட்டங்களையும் குழிதோண்டி புதைக்க வேண்டியிருக்கும்; எளிய மனிதர்களின் பிஞ்சு இதயங்களை எந்தவிதக் கருணையுமில்லாமல், காலடியில் போட்டு மிதிக்க வேண்டியிருக்கும்; அவர்களின் எதிர்ப்புக் குரல் கசியாதபடி, குரல்வளை மீது கத்தியை இறக்க வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்தே உங்கள் வேலையை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.

வரலாறு என்னும் ஈவு இரக்கமற்ற காட்டாற்று வெள்ளத்தின் போக்கை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், சாமானியர்களிடம் எதுவும் இல்லை. அவர்களின் ரத்தத்தையும், எலும்பையும் பயன்படுத்தி, காட்டாறின் மீது அணையைக் கட்டுவதுதான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்றால், அந்த பாரத மாதாவே உங்களை மன்னிக்க மாட்டாள்!  /news.vikatan.com

கருத்துகள் இல்லை: