செவ்வாய், 23 டிசம்பர், 2014

தேர்தல் முடிவுகள் : ஜார்கண்டில் பாஜ வெற்றி; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜார்கண்டில் பெரும்பான்மையான இடங்களில் பாஜ முன்னணியில் உள்ளது. இங்கு பாஜ ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. ஜம்முகாஷ்மீரில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை காணப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 5 கட்டங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று மொத்தமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 821 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, முக்கிய எதிர்கட்சியான முப்தி முகமது சயீதின் மக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் காங்கிரஸ், பாஜ ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை வாக்குபதிவு சதவீதம் அதிகரித்தது.


2002ல் 43.09, 2008ல் 61.42 சதவீதம் பதிவாகின. இம்முறை 65 சதவீதம் பதிவானது. அதிலும் இறுதி கட்ட தேர்தலில் 76 சதவீதம் பதிவானது. பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், ராணுவ முகாம்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல், கடும் குளிர், வெள்ள பாதிப்பு ஆகிய பல்வேறு இடையூறுகளையும் தாண்டி காஷ்மீர் மக்கள் இம்முறை ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஜம்முகாஷ்மீரில் 28 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜார்கண்டில் இம்முறை 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 1136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. இம்முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்றி தீருவது என்ற வியூகத்துடன் பாஜ தேர்தலை களம் கண்டது.ஜார்கண்ட் மாநிலத்திலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை தாண்டி மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.இங்கு 24 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் காரணமாக இங்கும் வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பில் ஜம்முகாஷ்மீரில் தொங்கு சட்ட மன்றமும், ஜார்கண்டில் பாஜ வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஜம்மு காஷ்மீரில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 11 இடங்களையும், காங்கிரஸ் 17, தேசிய மாநாட்டு கட்சி 28, பிடிபி 21 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.ஜார்கண்டில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜ 18 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் 14, ஜேஎம்எம் 18, ஜேவிஎம் 11, லாலுவின் ஆர்ஜேடி 5, நிதிஷின் ஐக்கிய ஜனதா 2 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் ஜார்கண்டில் பாஜ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் எந்த கட்சியும் பெரும்பான்மை பலத்தை எட்ட முடியாத நிலையே காணப்படுகிறது.  ஜார்கண்டில் பாஜ-42 ஜேஎம்எம்17, ஜேவிபிஎம்-6, காங்கிரஸ் கூட்டணி-8, மற்றவை 5 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் ஜார்கண்டில் இம்முறை பாஜ ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிடிபி-30, பாஜ-26, தேசியமாநாட்டு கட்சி-13 காங்கிரஸ்-12, மற்றவை -6 முன்னிலையில் உள்ளன dinakaran.com

கருத்துகள் இல்லை: