ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு 25 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்!

25 thousand liter milk abhishekam  to suseenthram hanuman நாகர்கோவில்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் இன்று காலை ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடந்தன. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர்  சிலை உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு இன்று காலை பல்வேறு வகையிலான அபிஷேங்கள் நடந்தன. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திருநீர், எலுமிச்சை சாறு, மாதுளை சாறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 25 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் பகல் 12 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்காக ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் லட்டு வினியோகம் தொடங்கியது. ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்ட் சார்பில், காலை 10 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோயில் கலையரங்கம் மற்றும் எஸ்.எம்.எஸ்.எம்., பள்ளி வளாகம், துவாரகா கிருஷ்ணன்கோவில் வளாகம் என 3 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை யில் தொடங்கிய அன்னதானம் இரவு வரை நடக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுசீந்திரத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து இருந்தனர். இது தவிர வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஆஞ்சநேயருக்கான அபிஷேகங்களை காண திரண்டனர். இன்று மாலை 6 மணிக்கு ராம ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மல்லி, பிச்சி, தாமரை, பச்சிலை, துளசி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி.க்கள் செல்வராஜ், சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: