புதன், 17 செப்டம்பர், 2014

கிரானைட் விசாரணையை சகாயம் ஐ ஏ எஸ் மேற்கொள்ள கூடாதாம் ! எதிர்த்து நீதிமன்றில் அதிமுக அரசு மனு !

தமிழகத்தில், கிரானைட் உட்பட, கனிம குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதில், 'சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக கனிம குவாரிகள் நடத்துவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த, 'டிராபிக்' ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தமிழகத்தில் உள்ள கனிம குவாரிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, இரண்டு மாதத்திற்குள், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
மேலும், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்துக்கு தேவையான உதவிகளை, உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். அவரது பயணச் செலவை அரசு ஏற்க வேண்டும்' என்றும் தெரிவித்தது. அத்துடன், வழக்கு விசாரணையை, அடுத்த மாதம், 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.  மடியில் கனம் அரசே ஊழலுக்கு துணை போகும் அவலம்.


இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வழக்கறிஞர் சார்பில், நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விவரம்:தமிழகத்தில் ஆற்று மணல், ஜல்லி, கருங்கல், கிரானைட் உட்பட, கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, ஏற்கனவே பல கட்டங்களாக விசாரணைகள் நடந்து வருகின்றன.அனைத்து விசாரணைகளும், உரிய முறையில், தொய்வின்றி தமிழக அரசால் கையாளப்படுகிறது. கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சில உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணை, தொடர்ந்து நடந்தும் வருகிறது. இந்நிலையில், கனிம குவாரிகள் முறைகேடு குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், ஏற்கனவே நடந்து வரும் விசாரணைகள், பாதிக்க வாய்ப்புள்ளது. புதிதாக ஒரு அதிகாரி விசாரிக்க ஆரம்பித்தால், ஏற்கனவே நிலுவையில் உள்ள விசாரணைகளில், மேலும் காலதாமதம் ஏற்படலாம்.எனவே, கனிமவள முறைகேடுகள் குறித்து, ஏற்கனவே நடந்து வரும் விசாரணைகளில், காலவிரயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு, ஓரிரு நாட்களில், விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நமது டில்லி நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: