ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

சென்னையில் இருந்தபடி 4 நகரங்களை உளவு பார்த்த அருண் செல்வராசன்

பாகிஸ்தானுக்காக தமிழ்நாட்டில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டான். மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவனை பொறி வைத்து பிடித்தனர். அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகவல்களை சேகரித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
அருண் செல்வராசன் தமிழகத்தின் முக்கிய இடங்களை படம் பிடித்து வைத்து இருந்துள்ளார். அந்த வரைபடங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. தமிழக போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முயற்சிகளை முடித்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. சென்னையில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த முடியாததால் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது.

2012–ல் தமீம்அன்சாரி, கடந்த ஏப்ரல் மாதம் ஜாகீர் உசேன் ஆகிய பாகிஸ்தான் உளவாளிகள் பிடிப்பட்டு இருந்தனர். தற்போது அருண் செல்வராசன் சிக்கியுள்ளான்.
போலி நிருபர் அடையாள அட்டை மூலம் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை அருண் செல்வராசன் படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
சென்னையில் இருந்தவாறு அவன் ஐதராபாத், பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களை உளவு பார்த்து வந்துள்ளான். இந்த நகரங்களில் தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக 30–க்கும் மேற்பட்ட முறை சென்று வந்துள்ளான்.
இந்த நகரங்களில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடித்து வைத்து இருந்துள்ளான்.
அரசியல் பிரமுகர்களிடமும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அருண் செல்வராசனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாளை மறுநாள் (16–ந் தேதி) அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: