வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சந்தி சிரித்து சரிந்து கிடக்கும் நீதித்துறை ! ஜெயலலிதாவை காப்பாற்ற கடும் முயற்சி ! பணம் பார்ப்பன பாசம் ?

கட்ஜூ
தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவும் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சியின் எதிர்ப்புமின்றி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போது பத்திரிகை கவுன்சில் தலைவராகவும் உள்ள மார்க்கண்டேய கட்ஜு நீதித்துறை ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சொல்லி வைத்தாற்போன்ற வேகத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கினார்கள் என்றும், அரசியல் தலையீட்டுக்குப் பணிந்து போனார்கள் என்றும் கடந்த ஜூலை மாதத்தில் தனது முகநூலில் (ஃபேஸ்புக்) தெரிவித்தார் கட்ஜு. மேலும், தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் (நவ. 2004 – அக்.2005) நீதித்துறை நியமனங்களில் தி.மு.க. தலையிட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் சூழலில், இவ்விசயம் ஊடகங்களின் முதன்மை விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் நீதிபதிகளும்தான் ஊழல் பெருச்சாளிகள் என்பதைப் போலவும், வட இந்திய ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்பதைப் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

ஊழல் மோசடி – முறைகேடுகளிலும் பாலியல் புகார்களிலும் சிக்கி நாடு முழுவதும் நீதிபதிகள் அம்பலப்பட்டு நிற்பதும், நீதித்துறையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடும் புதிய விவகாரமல்ல. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுதான் ஒரு ஊழல் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். ‘புனிதமானவர்களும் யோக்கியமானவர்களுமான’ நீதிபதிகளை அவ்வளவு எளிதில் தண்டித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. அதனால்தான் தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் நீதிபதி ராமசாமி, மே.வங்கத்தைச் சேர்ந்த சௌமித்ரா சென் உள்ளிட்ட பல நீதிபதிகள் எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பியிருக்கின்றனர். நீதிபதிகளின் ஊழல்களும் மோசடிகளும் பாலியல் கொட்டங்களும் சந்தி சிரித்து, நாறிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் வரை நீதித்துறையே ஊழலில் ஊறிக் கிடக்கிறது என்பதை ஒருமுறை நீதிமன்றத்து படியேறிவிட்டு வந்த எந்த மனிதனும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் கட்ஜுவோ, ஒருசில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை என்பது போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறாரே அன்றி, அடிமுதல் நுனி வரை நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்ற உண்மையைப் பேசக்கூட இல்லை. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் எட்டுப்பேர் ஊழல் பேர்வழிகள் என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நீதிபதிகள் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. இது பற்றியெல்லாம் கட்ஜு எதுவும் பேசவில்லை, மாறாக, நீதிபதிகளையும் நீதிமன்ற நடைமுறைகளையும் அவற்றின் தீர்ப்புகளையும் தனது செருப்பைவிடக் கேவலமாகக் கருதும் பாசிச ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார் என்று நற்சான்றிதழ் அளிக்கிறார் (ஆனந்த விகடன், 20.8.2014). ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து “எனக்கு எதுவும் தெரியாது” என்ற ஒரே போடாகப் போடுகிறார். இவையெல்லாம் கட்ஜுவின் யோக்கியதைக்கு சான்றுகள். அவரது குற்றச்சாட்டின் உள்நோக்கத்தை சந்தேகிப்பதற்கான அடிப்படைகள்.
யோக்கிய சிகாமணிகள்
ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட யோக்கிய சிகாமணிகள் (இடமிருந்து) பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.ராமசாமி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சௌமித்ரா சென், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி.தினகரன்.
கட்ஜு கிளப்பியுள்ள இப்பிரச்சினை, நீதித்துறை பற்றி மையமாக எழுப்ப வேண்டிய கேள்வியைத் திசை திருப்புகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச் சொத்துக்களையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோதக் கொள்கையின் மூலம் பகற்கொள்ளையடிக்கும் விவகாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்பது போலச் சித்தரித்த அன்னா ஹசாரேவை அன்று முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தின. அதேபோலத்தான் இன்று நீதித்துறை நியமனங்களில் அரசியல் தலையீட்டையும் ஊழலையும் களைந்துவிட்டால், நீதித்துறையானது அப்பழுக்கற்றதாக மாறிவிடும் என்று நம்பச் சொல்லும் கட்ஜுவையும் முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அன்று மோடிக்கு அன்னா ஹசாரே நற்சான்றிதழ் கொடுத்தைப் போலத்தான் இன்று கட்ஜுவும் ஜெயலலிதாவுக்கு நன்சான்றிதழ் கொடுக்கிறார்.
பிரசாந்த் பூஷண்
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்களின் ஒருவருமான பிரசாந்த் பூஷண்
ஆனால், இந்திய நீதித்துறையின் யோக்கியதை என்ன? முதலாளித்துவ வர்க்க வெறியும், ஆதிக்கசாதித் திமிரும், ஆணாதிக்க வக்கிரமும் கொண்ட சட்டபூர்வ நாட்டாமைகள்தான் உயர்- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்பதற்கு அவர்கள் அளித்துள்ள ஏராளமான தீர்ப்புகளே ஆதாரங்களாக உள்ளன. பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்ததோடு, சிதம்பரம் நடராசர் கோவிலைப் பார்ப்பன தீட்சிதர்களிடம் அயோக்கியத்தனமாக இந்நீதிபதிகள் ஒப்படைத்தனர். சங்கராச்சாரி என்ற பார்ப்பன கொலைகாரன் விடுவிக்கப்படுவதும், பதானி தோலா மற்றும் லட்சுமண்பூர் பதேயில் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்த ஆதிக்க சாதிவெறியர்கள் விடுதலை செய்யப்படுவதும், கலவரங்களை நடத்திப் பல உயிர்களைக் காவு வாங்கிய இந்துவெறி குண்டர்கள் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் உலாவருவதும், அப்பாவி முஸ்லிம்கள் பொவழக்குகளில் சிறையிடப்படுவதும் இந்திய நீதித்துறையின் அயோக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றன.
வாய்தா ராணி ஜெயலலிதா முதலாக மத்திய – மாநில அமைச்சர்கள் பலரும் நீதித்துறையின் தயவில் ஊழல் வழக்குகளைச் சுலபமாக எதிர்கொண்டு தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள். அம்பானியும் டாடாவும் அதானியும் நாட்டைச் சட்டப்படியே கொள்ளையிட நீதிமன்றங்கள்தான் உரிமங்கள் வழங்குகின்றன. ஜெயாவுக்கு எதிரான டான்சி நிலபேர ஊழல் வழக்கிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும் ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் புது பொழிப்புரை எழுதி, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். வோடஃபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பையும், நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடியின மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தியடிக்கப்பட்டதையும், காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் தொடரும் அரசு பயங்கரவாதப் படுகொலைகளையும் உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது. 2ஜி ஊழல் விவகாரத்தில் தரகு முதலாளி டாடாவுக்கும் தரகர் நீரா ராடியாவுக்குமிடையிலான உரையாடலை நீதிபதிகள் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை. அது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று அந்த முக்கியமான சாட்சியத்தைக் கிடப்பில் போட்டனர். இவையெல்லாம் அரசியல் தலையீடு அல்லது ஊழல் காரணமாகவா நடந்தன? எவ்வித அரசியல் கட்சித் தலையீடு இல்லாத நிலையிலும், எவ்வித நிர்ப்பந்தங்கள் இல்லாத போதிலும், ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும் பறிக்க கூடியதுமான தீர்ப்புகளைத்தான் நீதிபதிகள் வழங்கி வருகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, நீதிபதிகளே தேர்வு செய்து நியமிக்கும் “கொலீஜியம்” முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகள் மீதான மக்களின் கண்காணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகார வர்க்கத்தைப் போலவே மக்களுக்கு மேலானவர்களாக, மக்களின் எஜமானர்களாகவே நீதிபதிகளும் திணிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியின் தலையீடு, சாதி, பணம், இலஞ்சம், ஊழல் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பதென்பது ஊர் சிரித்த விவகாரம்தான்.
ஊழல் - மோசடி
உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகத்தின் அனைத்து நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு ஏறத்தாழ 867 பேர் ஊழல்-மோசடிப் பேர்வழிகள் என்று “ஊழலுக்கு எதிரான இயக்க”த்தினர் பகிரங்கமாக வெளியிட்டுள்ள பிரசுரம்.
தற்போதுள்ள கொலீஜியம் முறையில் தவறான தேர்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாலும், நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத் துறையின் பங்களிப்பு இல்லாததாலும் இந்த முறையை மாற்றியமைப்பதாகச் சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். புதிய முறையிலான நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இரு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மைய அரசின் சட்ட அமைச்சர் மற்றும் சமூகத்தால் மதிக்கப்படுகின்ற இருவர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என்றும், சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரை (EMINENT PERSONS) பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்வு செய்வார்கள் என்றும், மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ரிக்கார்ட் டான்ஸ்
டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி டெல்லி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நடத்திய விழாவில் நீதிபதிகள் முன்னிலையில் நடந்த ரிக்கார்டு டான்ஸ் (இந்து, மார்ச் 14, 2014)
இந்த ஆணையம் நீதிபதிகளைத் தேர்வு செய்யும்போது, இக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அத்தேர்வு ரத்தாகும் என்பதால், ஆளும் கட்சிக்கு உடன்பாடில்லாத நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும், நீதிபதிகள் நியமன ஆணையத்தில் இடம்பெறும் சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரும் ஆளும் கட்சிக்கு விசுவாசமானவர்களாகவே இருப்பார்கள் என்றும், இதனால் நீதிபதிகள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிடும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.
உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் தகுதிகள் என்ன, அவர்களைத் தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்த மசோதா தெளிவாக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தவறு செய்யும் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யவோ, தண்டிக்கவோ இந்த ஆணையத்துக்கு அதிகாரமும் இல்லை. கடைசியில், புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கதையாக முந்தைய கொலீஜியம் முறையில் திரைமறைவில் நடந்துவந்த அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகளையும் நிர்ப்பந்தங்களையும், இனி ஆணையத்தின் பெயரால் நேரடியாக செயல்படுத்தும் வகையில்தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்துறையின் ஊழல்களை விசாரிக்கும் பணியில் நீதித்துறை ஈடுபட்டதை அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த் உள்ளிட்ட பல வழக்குகளில் பார்த்தோம். இப்போது நீதித்துறை ஊழலை ஒழித்து அதன் மீது ஒழுக்கத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை நிர்வாகத்துறை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கேலிக்கூத்து.
ஊழல்கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் நண்பராகச் செயல்பட்டதால் தன் மீது அவதூறு பரப்ப உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, நீதிபதி பதவிக்கான தனது ஒப்புதலை கோபால் சுப்பிரமணியம் திரும்பப் பெற்றுக் கொண்டார். இப்போது கோபால் சுப்பிரமணியம் இடத்தில் மோடி விசுவாச வழக்குரைஞரான உதய் லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே இப்போது சோலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நீதித்துறை குறித்த மோடி அரசின் அணுகுமுறைக்கு இவை சான்றுகள்.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், நீதிமன்ற நியமன ஆணையத்தில் இடம்பெறக்கூடிய ‘சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்களாக’ சு.சாமி, சோ போன்றவர்கள் மோடி அரசால் தேர்வு செய்யப்படுவார்கள். காலியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில், அமித் ஷா, தீனாநாத் பத்ரா, ஒ.எஸ்.ராவ் போன்ற, உடம்பில் ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஓடுகின்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். இத்தகைய நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் ஏட்டளவில் உள்ள மதச் சார்பின்மையையும் கருத்துரிமையையும் பறித்து, எல்லா துறைகளிலும் இந்துராஷ்டித்தை சட்டபூர்வமானதாக்கும்.
இந்த நீதிபதிகள் நியமன மசோதாவின் மூலம் நீதித்துறை ஊழலை ஒழிக்கப்போவதாக அரசு கூறுவது நகைக்கத்தக்க ஒரு கேலிக்கூத்து. சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் இருந்தால்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று நீதித்துறை சொல்கிறதே, அது மிகப்பெரிய பம்மாத்து. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மறுகாலனியாக்கத்துக்கும் காவிமயமாக்கத்துக்கும் ஏற்ப மோடி அரசு நீதித்துறையை மறுவார்ப்பு செய்து கொள்ளும் என்பது மட்டுமே உண்மை.
- பாலன் vinavu.com

கருத்துகள் இல்லை: