வியாழன், 8 மே, 2014

2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி இன்று வாக்குமூலம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கடந்த திங்கள்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அவரிடம் நீதிபதி அளித்திருந்த 1,718 கேள்விகளுக்கான பதிலை ராசா எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியத் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ.ராசாவின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பதிவு செய்தனர்.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார்.
அதைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக பால்வா வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி சைனி கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தார்.
இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது வாக்குமூலத்தை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிவு செய்ய உள்ளார். அவரும் தனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதியிடம் புதன்கிழமை அனுமதி பெற்றார் dinamani.com

கருத்துகள் இல்லை: