செவ்வாய், 6 மே, 2014

திமுக தயவில் 10 ஆண்டு பதவி சுகம் அனுபவித்தநன்றி மறந்த காங்கிரஸ்…டி.ஆர்.பாலு பதிலடி


டெல்லி: மத்தியில் பத்து ஆண்டுகள் திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது என்று திமுகவின் மூத்த தலைவரும் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக ஒரு நன்றி மறந்த கட்சி என்றும், ஐந்தாண்டுகள் காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தியது என்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.  திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு பற்றியும், ஆ.ராஜா பற்றியும் அவர் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்திருந்தார் அதற்கு பதிலடி தரும் விதமாக டி.ஆர்.பாலு கருத்து கூறியுள்ளார். ஜெய்ராம் ரமேஷ், இப்போது என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்? அவரது கருத்துக்கள் தேவையற்றது, அடிப்படை ஆதாரமற்றது. 2009 ம் ஆண்டு திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த காரணத்தினால்தான் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. அதற்கும் முன்பும் திமுகதான் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தது. பத்தாண்டு காலம் திமுகவின் தயவில்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்ய முடிந்தது. சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிதான் நன்றி மறந்து செயல்படுகிறது என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நான் அமைச்சராக இருந்த போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நாடுமுழுவதும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளொன்று 7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. இதெல்லாம் ஜெய்ராம் ராமேஷிற்கு தெரியுமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதில் இருந்து இரு கட்சித்தலைவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் உடனான கூட்டணியை மறக்க நினைக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: