புதன், 31 ஜூலை, 2013

ஆதிக்க ஜாதிவெறி ராமதாசை காப்பாற்றவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கோரிக்கையை வீரமணி ஸ்டார்ட் ?

மதுரைதலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).
1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.
“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.
பத்திரிகை பேட்டி
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சிவனடியார் ஆறுமுகச் சாமி மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன். (கோப்புப் படம்)
2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.
இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.
இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
வழக்கறிஞர் ராஜு
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் தோழர் ராஜு (கோப்புப் படம்).
செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.
2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.
தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.
அர்ச்சகர் மாணவர்
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் அர்ச்சகர் மாணவர்.
இவையெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.
பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!
இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?
அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.
பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

கருத்துகள் இல்லை: