சனி, 10 நவம்பர், 2012

நீதிமன்றத்தில் போலீஸ் வேனில் மயங்கி விழுந்த பி.ஆர்.பழனிச்சாமி!

 Pr Palanisamy Faints Melur Court மேலூர்: கிரானைட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமி மேலூர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தார்.
பழனிச்சாமி மீது 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் காவல் நீட்டிப்புக்காக மேலூர் கோர்ட்டிற்கு நேற்று அழைத்து வரப்பட்டார்.

அப்போது வரும் 23ம் தேதி வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டது. அப்போது பழனிச்சாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் மாலைக்கு ஒத்தி வைத்தார்.
இதன் மீதான தீர்ப்புக்காக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வேனிலேயே பழனிச்சாமி காத்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய அவர் மயங்கியபடி இருக்கையில் சாய்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரது குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே அவரது வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட்டிடம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பழனிச்சாமியை கொண்டு செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனிச்சாமி மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.
இந் நிலையில் அவரை மதுரை சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பை வரும் 15ம் தேதி அளிப்பதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இதனால் பழனிச்சாமி மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கே கொண்டு செல்லப்பட்டார். http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: