புதன், 16 மே, 2012

அரசின் 15 கோடி ரூபா விளம்பரத்தில் விட்டுப்போன ஒரு வாக்கியம்!

அ.தி.மு.க.-வின் பிரசார பீரங்கி நடிகர் ராமராஜன், “பிற மாநிலங்கள் அம்மாவின் திட்டங்களை வியப்புடன் பார்க்கின்றன” என்று நேற்றுதான் மதுரையில் பேசும்போது சொன்னார். அவர் ஒரு தீர்க்கதரிசி. இன்று நிஜமாகவே அனைத்து மாநிலங்களும், அம்மா ஆட்சியை வியப்புடன் பார்க்கின்றன.
காரணம், தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்தியாவிலிருந்து வெளியாகும் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் 4 முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களை வெளியிடுவதற்காக வெறும் 15 கோடி ரூபா மட்டுமே செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவா முக்கியம்? பணம் இன்று வரும், நாளை போகும்.
மற்றைய நாட்களில் நாடு முழுவதும் அம்மா பெயரை விளம்பரம் செய்தால், தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையை கேவலமாக நினைக்க மாட்டார்களா? அதுதான், இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடியில், ரூ.15 கோடி வரை இன்றைய தின விளம்பரங்களுக்கு மட்டும் செலவாகி விட்டதே என்று சிலர் குறை கூறுகிறார்கள். 15 கோடி எல்லாம் பெரிய தொகையா? எந்த வித தொல்லையும் கொடுக்காமல் நம்ம ராவணனை ஒரு வாரம் இயங்க விடுங்கள். விரல் சொடுக்கி, சொடுக்கி, 15 கோடி சம்பாதித்துக் கொடுப்பார்.
இன்று வெளியான விளம்பரங்கள், மொத்தம் 4 பக்கங்கள் அளவுக்கு விரிவானவை. அவற்றில், ஓராண்டு ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இல்லத்தரசிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர்… திருமணமாகாத பெண்களுக்கு தாலிக்கு தங்கம்… வசதியற்றவர்களுக்கு இலவச ஆடு, மாடுகள்… அந்த ஆடு மாடுகளுக்கு இலவச புல்லுக்கட்டு… இவ்வாறு நீண்டு செல்கிறது பட்டியல். பக்கங்கள் பற்றாக்குறை காரணமாக, “தமிழக மக்களின் காதுகளுக்கு இலவச பூ” என்ற வாக்கியம் இம்முறை இடம்பெறவில்லை.
தமிழகத்தின் சில பத்திரிகைகள், “மின்வெட்டு காரணமாக மின்விசிறிகூட போட முடியாமல் கடுமையாக வெப்பத்தில் மக்கள் அவதி. இந்த லட்சணத்தில் விளம்பரத்துக்கு 15 கோடி செலவு செய்வதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளன.
கடுமையாக வெப்பம் அவதிதான் என்பது முதல்வருக்கு தெரியாதா என்ன? நன்றாகவே தெரியும். வெப்பத்தினால் அவதி ஏற்படாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. நாளையே முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக நாளை கொடநாடு செல்கிறார். அங்கு காலநிலை சுகமாக உள்ளது. நாளை தனி விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு செல்கிறார்.
டவுன்பஸ்ஸில் ஏறி, பவர்-கட் உள்ள அலுவலகத்துக்குள் இருந்து, “மக்கள் அவதி” என்று செய்தி எழுதிக் கொடுத்த நிருபருக்கு, பிரஷரைஸ்ட் ஹெலிகாப்டரிலும் ஏர்கண்டிஷன் இதமாக இருக்கும் என்பது தெரியுமா?
தெரிந்துதான் ‘அவதி’ என்று எழுதினாரா அந்தாள்?

கருத்துகள் இல்லை: