செவ்வாய், 15 மே, 2012

கோஷ்டி அரசியல் எதிரொலி: வெளியேற தயாராகும் ஞானதேசிகன்

சுதந்திரமான செயல்பாடுகளுக்கு கட்சி மேலிடம் வழி விடாததால், ராஜினாமா என்ற முடிவை எடுப்பது குறித்து யோசிக்கும் அளவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோஷ்டிகளின் கூடாரமாக உள்ள காங்கிரசில், கோஷ்டி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்பவராக, செயல்பட்டார். ஞானதேசிகனால் முழுமையாக கோஷ்டிகளை அழிக்க முடியவில்லை. மேலும், தான் விரும்பும் அளவுக்கு சுதந்ரமாக செயல்பட, தனக்கு விசுவாசமானோர் தன்னைச் சுற்றி இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதற்கேற்ப, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு, பட்டியல் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீவிர ஆலோசனை: ஆனால், ஞானதேசிகன் விரும்பும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கு, மற்ற கோஷ்டி தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர், தமிழக காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகள்: இதுகுறித்து, காங்., முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும் போது, "ஞானதேசிகன் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். சோ.பாலகிருஷ்ணன் தலைவராக இருந்த போது தான் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின், நான்கு தலைவர்கள் வந்துவிட்டனர். நிர்வாகிகள் மாற்றப்படவில்லை. அவருக்குப் பின் வந்த தலைவர்கள் நிர்வாகிகளை மாற்ற முயற்சி எடுத்த போதெல்லாம், மற்ற கோஷ்டி தலைவர்கள் அதை அனுமதிக்கவில்லை. அதே நிலை தான் இப்போதும் உள்ளது. ஞானதேசிகன் நிர்வாகிகளை நியமிப்பதற்கு, அவர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர். இதில், ஞானதேசிகன் அதிருப்தியில் உள்ளார்' என்றார்.

இருக்க மாட்டேன்: மற்றொரு நிர்வாகி கூறும் போது, "நான் எதிர்பார்ப்புகள் இல்லாதவன்; அதனால் எனக்கு ஏமாற்றமும் இல்லை' என்று ஞானதேசிகன் அடிக்கடி சொல்வார். அதுபோல், "செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால், இந்தப் பதவியில் நான் இருக்க மாட்டேன்' என்றும் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியை, காங்., மேலிடம் உருவாக்கி வருகிறது. கட்சியின் அதிகாரத்தை கீழ்மட்டத்துக்கு பரவலாக்கினால் தான், கட்சியை வளர்க்க முடியும்' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: