புதன், 4 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலையில் பெண்தொடர்பு diversion tactic

ராமஜெயம் கொலை: பெண் தொடர்பை உங்களுக்கு சொன்னது யாருங்க?

விறுவிறுப்பு
ராமஜெயம் கொலையில் ஒரு பெண் விவகாரம் உள்ளது என்ற கதையே இப்போது பரபரப்பாக அடிபடுகிறது. இந்த கதை கேஸை முழுமையாக வேறு ஒரு திசையில் திருப்ப உதவுகிறது என்பதை சுலபமாக பார்க்க முடிகிறது. அதில் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.
ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தன்று அவரது செல் போனுக்கு அதிகாலை 3 மணிக்கு ஒரு அழைப்பு வந்து, அவர் லுங்கியுடன் வெளியே சென்றார் என்று ஒரு தியரி சொல்லப்படுகிறது. வழமையாக ட்ராக் சூட், ஸ்னீக்கர் அணிந்து வாக்கிங் செல்லும் ராமஜெயம், அன்று மட்டும் லுங்கியுடன் வாக்கிங் சென்றாரா? என்ற கேள்வியும் அத்துடன் தொடர்பாக கேட்கப்படுகிறது.

அதாவது, அவர் வாக்கிங் செல்லவில்லை. அதற்குமுன் 3 மணிக்கு யாரோ அழைத்து வெளியே சென்றார். அவர் எங்கே சென்றார் என்பதை அவரது குடும்பத்தினர் சொல்ல முடியாத சங்கடத்தில் உள்ளனர் என்று போகிறது அந்த ஆங்கிள். அதிகாலையில் அழைத்தவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஊகமும் உள்ளது.
திருச்சி தில்லைநகரில் வசிக்கும் ராமஜெயம், தனது வீட்டில் இருந்து அதே தில்லைநகர் 4-வது கிராஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு, அவ்வப்போது நடந்தே போய் வருவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரிந்துள்ளது. அந்த வீட்டில் வசித்த பெண், மற்றும் அவரது கணவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அங்கு குடிவந்த அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில், கணவன் பிரிந்து சென்று விட்டார். மனைவி மட்டுமே வசித்து வந்தார். அந்த பெண், ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில் 4-வது கிராசிலேயே தொடர்ந்து வசித்துள்ளார்.
அதேபோல, திருச்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவரும், ராமஜெயத்தின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டுக்கும் ராமஜெயம் லுங்கியுடன் சென்று வருவதுண்டு.
இதில் முதலில் கூறப்பட்ட பெண்ணை, ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தில் இருந்து காணவில்லை. அவர் எங்கோ மாயமாக மறைந்து விட்டார். மற்றைய பெண் திருச்சியிலேயே உள்ளார்.
இந்த இரு பெண்கள் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தில் ராமஜெயம் ‘அழைக்கப்பட்டு’, முதலில் விஷம் கொடுக்கப்பட்டு, பின்னர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே, இந்த பெண் விவகாரத்தின் தீம். அதாவது, சம்மந்தப்பட்ட பெண்களோடு சம்மந்தப்பட்ட யாரோ ஆக்ரோஷமாக பழிவாங்கியிருக்கிறார்கள் என்ற கோணம் அது.
இதில் கொலைக்கான ஒரு ரிமோட் சான்ஸ் இருப்பது உண்மை. ஆனால், சில விஷயங்கள் இடிக்கின்றன.
ராமஜெயம் அவரைக் கடத்தியவர்களின் கஸ்டடியில் இருந்தபோதோ, அல்லது கொல்லப்பட்ட பின்னரோ, கடத்தியவர்கள் அமைச்சர் நேருவை எதற்கோ தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். ராமஜெயத்தின் செல் போனையே எடுத்து, அதிலுள்ள எண்களை அழைத்து, நேருவின் போன் நம்பர் உள்ளதா என்று கேட்டிருக்கிறார்கள்.
பெண் விஷயத்தில் பழிவாங்குபவர்கள் எதற்காக நேருவை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டும்? எதற்காக கொன்றோம் என்று விளக்கம் கொடுக்கவா? அது இடிக்கிறது.
மற்றொரு விஷயம், இந்த பெண் விவகாரம் எப்படி வெளியே வந்தது என்பது!
எமக்கு தெரிந்தவரை, இந்த பெண் விவகாரத்தை விலாவாரியாக வெளியே கசிய விட்டதே போலீஸ்தான். இந்த விசாரணையுடன் தொடர்புடைய மூன்று வெவ்வேறு காவல்துறை நபர்களை நாம் விபரம் அறிய தொடர்பு கொண்டோம். மூவரும், இந்த விஷயம் பற்றி எமக்கு சொன்ன விதம், ஆச்சரியமானது.
ஒரு புதிய சினிமா டைரக்டர், தயாரிப்பாளரிடம் கதை சொல்வதுபோல, விலாவாரியாக, சீன்-பை-சீன் சொன்னார்கள். குறிப்பிட்ட பெண், தூத்துக்குடியில் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதில் துவங்கி, அவருடைய ஜாதி… அவர்கள் திருச்சிக்கு வந்த தேதி…  என்று எதுவும் பிசகாமல் ஒப்பித்தார்கள்.
ஒன்று திருச்சி போலீஸ்காரர்கள் ரொம்ப இன்னொசென்டாக இருக்க வேண்டும், அல்லது மீடியாக்காரர்களை திசைதிருப்ப கூடிய திறமைசாலிகளாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: