வியாழன், 5 ஏப்ரல், 2012

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி

கொஞ்சம் சென்னை, நிறைய வெண்ணெய்!


ஒரு பக்கம் சென்னை. மறுபக்கம் சச்சின். இருவரில் எவர் ஜெயித்தாலும் மகிழ்ச்சி என்பதால் உற்சாகத்துடன் ஐபிஎல்  ஐந்தாவது சீஸனின் முதல் போட்டியை ரசிக்கத் தொடங்கினேன். டாஸ் ஜெயித்து, சென்னையை பேட்டிங் செய்யப் பணித்தார் மும்பை கேப்டன் ஹர்பஜன்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இருந்தது. அவருடைய சமீபத்திய ஆட்டங்கள் திருப்தி தராதவை என்பதால் அவர்மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. வழக்கம்போல, முரளி விஜய், பத்ரிநாத், ரெய்னா, பொலிஞ்சர் போன்ற நிலைய வித்வான்கள் இருந்தனர். மைக்கேல் ஹஸி இல்லாதது குறைதான். மும்பை அணியில் சச்சின், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் இருந்தனர். தென்னாப்பிரிக்காவின் லெவி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.
சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. வந்தவுடனேயே மும்பை அணிக்காக ஒரு விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் சென்னையின் முரளி
விஜய். ஆம். தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளெசிஸ் ஒற்றை இலக்கத்தில் ரன் அவுட். வழக்கமான ஒன் டவுன் பேட்ஸ்மேன் பத்ரிநாத் வரவில்லை. தோனியின் செல்லப்பிள்ளை ரெய்னா வந்தார். லெஃப்ட் – ரைட் காம்பினேஷன்தான் காரணம் என்று நம்புவோம்.
நான்காவது ஓவரில்தான் பந்து முதன்முறையாக எல்லைக்கோட்டைக் கடந்தது. சிக்ஸர். உபயம் ரெய்னா. அதே ஓவரில் விஜய் ஒரு பவுண்டரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜனின் பந்துவீச்சைப் பார்க்க  முடிந்தது. அதிரடிகள் எதுவுமின்றி அடக்க ஒடுக்கமாக ஆறு ஓவர்கள் முடிந்தன. இரண்டு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள்.  இந்தப் போட்டியிலேனும் வான வேடிக்கை நிகழ்த்துவார் முரளி விஜய் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். அடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்து அவுட் ஆனார். பத்து ரன்கள் மட்டும் எடுத்திருந்தார்.
எட்டாவது ஓவர் முடிந்தபோது அதுவரை இல்லாத நம்பிக்கைக்கீற்று திடீரென தட்டுப்பட்டது. ரெய்னாவும் ப்ராவோவும் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசினார்கள். ஒன்பதாவது ஓவரின் முடிவில் ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட். அப்போது ஸ்கோர் 69/2. பத்தாவது ஓவரை ப்ரக்யான் ஓஜா வீசினார். உடனடி பலன். சுரேஷ் ரெய்னா அவுட். முப்பத்தியாறு ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக அதிரடி வீரர் அல்பி மோர்கெல் களமிறங்கினார்.
அடுத்தடுத்து ஓவர்கள் நகர்ந்தனவே தவிர, ஒன்றும் உருப்படியாக நடக்கவில்லை. சென்னை தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது. ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த ப்ராவோ பத்தொன்பது ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  பன்னிரண்டு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள். ரன் ரேட் ஏழு. தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அல்பி மோர்கல் அலட்சியாக தூக்கிக்கொடுத்துவிட்டு அவுட் ஆகிப் போனார். ஐந்தாவது விக்கெட்டும்  விழுந்தது.
கேப்டன் கூல் தோனி களமிறங்கினார். ஒன்றும் சிறப்பாக நடக்கவில்லை. பதினைந்து ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் 95/5. எஞ்சிய ஐந்து ஓவர்களில் ஏதாவது சாதித்தால் உண்டு என்ற நிலையில் சென்னை அணி இருந்தபோது தோனி ரன் அவுட். ஐபிஎல் சீஸன் 5ல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரான ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இருபது ஓவர்களும் நின்று ஆடினாலே போதும் என்ற நிலையில்தான் அப்போது இருந்தது சென்னை அணி. போதாக்குறைக்கு, பத்ரிநாத்தும் பத்துரன்னில் பறந்துவிட்டார். ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்குத் தெரிந்தது.
ஆபந்பாந்தவன் அஸ்வின் களமிறங்கினார். பதினேழு ஓவர்கள் முடிந்தபோது  ஏழு விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள்.  அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியவே, 19.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட். கோடிகளைக் குவித்து வாங்கப்பட்ட ஜடேஜாவின் ஆட்டம் வழமைபோல பல்லிளிப்பு. சென்னை அணியில் அதிக ரன்களைக் குவித்தவர் ரெய்னா (36 ) தொடர்ந்து இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றிய சென்னை அணியின் இந்த ஆட்டம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் இருந்தது. ஆனாலும் கேப்டன் தோனி என்பதால் ஏதோ புதிதாக சொதப்பியது போலத் தெரியவில்லை. நிற்க.
அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அலட்சியாக ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பேட்டிங்கைத் தொடங்கியது மும்பை அணி. சச்சினும் லெவியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரே ரன். அட்டகாசமாக ஆரம்பித்தது சென்னை அணி. இரண்டாவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்தார் லெவி. மூன்றாவது ஓவரில் சச்சின் பவுண்டரி ஒன்றையும் சிக்ஸர் ஒன்றையும் விளாசினார்.
கொஞ்சமும் தயக்கமில்லாமல் அடித்து ஆடியது மும்பை. நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள். ஹர்பஜனின் தலைமையில் ஆடும்போது சச்சினின் பேட்டிங் திறன் மெம்படுமா என்று ஒரு கேள்வி  செட்மேக்ஸில் கேட்கப்பட்டது. சிரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஐந்தாவது ஓவரை வீசவந்தார் அஸ்வின். வெறும் மூன்று ரன்களே அடிக்கமுடிந்தது. அஷ்வினா, கொக்கா!
கோடீஸ்வரன் ஜடேஜாவுக்கு பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து வரவேற்பு கொடுத்தார் லெவி. பத்து ஓவரில் மேட்ச் முடியுமா அல்லது ஒன்றிரண்டு பந்துகள் கூடுதலாகத் தேவைப்படுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். செய்வதறியாது திகைத்திருந்தார் கேப்டன் கூல் தோனி, வழக்கம்போல. எல்லோரும் எதிர்பார்த்தது போல சிக்ஸர் மழை  பொழிந்து, அரைச்சதம் அடித்தார் லெவி. அடுத்த பந்தில் அவுட்டும் ஆனார். 69 ரன்களுக்கு முதல் விக்கெட்.
மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத்தர இருக்கின்றவராக எல்லோராலும் நம்பப்படும் ரோஹித் சர்மா களமிறங்கினார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, இந்தப் போட்டியில் அதிக ரன்களைக் குவிக்க இருப்பவர் ரோஹித் சர்மாவா, சுரேஷ் ரெய்னாவா என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ரோஹித் சர்மா வந்தார். இரண்டாவது பந்தை எதிர்கொண்டபோது அவருடைய முகம் சுருங்கியது. கீழே  கால்நீட்டி உட்கார்ந்துவிட்டார். பிசியோ வரவழைக்கப்பட்டார். சில நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் செய்தபிறகு அதிரடிக்குத் தயாரானார் ரோஹித். ஆனாலும் ரோஹித்துக்கு அத்தனை சிரமத்தைக் கொடுக்க விரும்பாமல், அவரை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் பொலிஞ்சர்.
விக்கெட் வீழ்த்திய சூட்டோடு சச்சினை நோக்கி பவுன்சரை அனுப்பினார் பொலிஞ்சர். அது சச்சினின் கையைத் தாக்கியது. காயம். பேட்டிங்கைத் தொடரமுடியாமல் பாதியிலேயே வெளியேறினார் சச்சின். சென்னை நினைத்தால் எப்படியும் விக்கெட் வீழ்த்தமுடியும் என்பதை இந்த நேரத்தில் பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன். பத்து ஓவர்கள் முடிந்தபோது மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள்.
மீண்டும் பந்துவீச வந்தார் அஸ்வின். அப்போது அவர் இரண்டு ஓவர்களில் பதினோரு ரன்களைக் கொடுத்திருந்தார். சென்னை அணியினரின் கைவிரல்கள் ஏன் இத்தனை பளபளப்பாக இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். கைகளில் வெண்ணெய் தடவி வந்துள்ளனர் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன். அடடா, என்னவொரு ஃபீல்டிங். விசில் போடு! விசில் போடு!
பதினாறாவது ஓவரில் சதம் அடித்தது மும்பை அணி. ஒவ்வொரு ரன்னையும் உற்சாகம் பொங்க ரசித்து மகிழ்ந்தார் மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் திருமதி அம்பானி. கூடவே, அவருடைய மகன். பதினேழாவது ஓவரில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் ஃப்ராங்க்ளின். பத்தொன்பது பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி. மும்பை அணியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்தவர் ரிச்சர்ட் லெவி. ஐம்பது ரன்கள். அவரே ஆட்டநாயகன்!
0
முக்தர் அப்பாஸ் நக்வி

கருத்துகள் இல்லை: