வெள்ளி, 30 மார்ச், 2012

ஒசாமா Bin Laden பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வந்தார் மனைவி வாக்குமூலம்

நியூயார்க்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் முழுமையான சுதந்திரத்துடன் ஒசாமா பின்லேடன் வலம் வந்ததாக அவரது இளம் மனைவி அமல் அகமது அப்துல்பதே வாக்குமூலம் அளித்துள்ளார்
9 ஆண்டு காலம் பாகிஸ்தானில் முழு சுதந்திரத்துடன் ஒசாமா வலம்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரிடம் ஒசாமாவின் இளம் மனைவி அப்துல்பதே அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

2000-ம் ஆண்டு ஒசாமா பின்லேடனை திருமணம் செய்து கொண்டேன். இஸ்லாத்துக்காக போராடும் முஜாகிதீன் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒசாமாவை திருமணம் செய்து கொண்டேன்..
2000-ம் ஆண்டு ஜூலை மாதம் கராச்சிக்கு வந்து தங்கியிருந்தேன். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவுடன் இணைந்து கொண்டேன். அப்போது பின்லேடனின் மற்ற இரண்டு மனைவிகளும் அங்கு இருந்தனர்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்குப் பின் குழந்தையுடன் மீண்டும் பாகிஸ்தான் திரும்பிவிட்டேன். சில பாகிஸ்தானிய குடும்பங்களின் உதவியுடன் 7 வீடுகளில் தங்க வைக்கப்பட்டேன்.
2002-ம் ஆண்டு பெசாவருக்கு சென்று மீண்டும் ஒசாமாவுடன் இணைந்து கொண்டேன். கென்யா மற்றும் இந்தோனேசியாவில் அல்குவைதாவினர் தாக்குதல்களை நடத்திய நிலையில் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா தீவிரம் காட்டியது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி உள்மலைப் பகுதிகளில் குடும்பத்தினரை ஒசாமா தங்க வைத்தார். முதலில் ஸ்வாட் பள்ளத்தாக்கின் சங்கலா மாவட்டத்தில் தங்கியிருந்தோம். இஸ்லாமாபாத்தின் வடமேற்கில் 80 மைல் தொலைவில் இது உள்ளது. 8 அல்லது 9 மாதம் இரண்டு வீடுகளில் இந்த இடத்தில் இருந்தோம்.
2003-ம் ஆண்டு இஸ்லாமாபாத்துக்கு மிக அருகில் உள்ள ஹரிபூர் நகருக்கு வந்தோம். 2 ஆண்டுகாலம் வாடகை வீட்டில் வசித்தோம். ஹரிபூரில் தான் இன்னொரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். 2004-ல் மற்றொரு ஆண் குழந்தையை ஹரிப்பூர் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்தேன். ஆனால் இரண்டு அல்லது 3 மணி நேரம் தான் மருத்துவமனையில் இருந்திருப்பேன். அப்போது மருத்துவமனையில் போலியான அடையாள அட்டைகளைக் காட்டினேன்.
2005-ம் ஆண்டு நடுப்பகுதியில் அபோதாபாத்துக்கு இடம்பெயர்ந்தோம். அபோதாபாத்தில் 2006-ம் ஆண்டு ஒரு குழந்தையையும் 2008-ம் ஆண்டு மற்றொரு குழந்தையையும் பெற்றெடுத்தேன்.
அபோதாபாத்தில் அமெரிக்க கமாண்டோ படையினர் தாக்குதல் நடத்தியபோது பின்லேடனுடன் அதே அறையில்தான் இருந்தேன். அப்போது எனக்கு காலில் கூண்டு காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஒரு மனைவி பஸ்ரா, பின்லேடனின் சகோதரர் அப்ரர் மற்றும் பின்லேடனின் 20 வயது மகன் கலீல் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று அப்துல்பதே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: