வெள்ளி, 16 டிசம்பர், 2011

அணையை உடைக்க அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

புதுடில்லி: "முல்லைப் பெரியாறு அணையை உடைக்க அனுமதிக்க முடியாது' என, அணையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களில் ஒன்பது பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது.

முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணை மிகவும் பலவீனமடைந்து விட்டதாகவும், அது எந்நேரத்திலும் உடைந்து விடும் என, கேரளாவில் பீதியை மாநில அரசும், எதிர்கட்சியினரும் பரப்பி விட்டனர். அதற்கேற்றார் போல், அணையைச் சுற்றி உள்ள பகுதிகளில் அவ்வப் போது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அணையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களில் ஒன்பது பேர், "பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில், தற்போதுள்ள அணையை உடைக்க வேண்டும், புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. விசாரணை முடிவில், "பொதுமக்களின் பீதி காரணமாக, அணையை உடைக்க அனுமதிக்க முடியாது.
அணை பிரச்னையை, சுப்ரீம் கோர்ட் நியமித்த அதிகார குழுவில் கேரள அரசு சார்பில் இடம் பெற்றுள்ள நீதிபதி கே.டி.தாமஸ் மூலமாக, அக்குழுவை அணுகியிருக்க வேண்டும். அணை உடைந்தால், ஏற்படப் போகும் ஆபத்தை பிரதமர் பொறுப்போடு கையாளமாட்டார் என எப்படி சொல்கிறீர்கள். அப்படி சொல்வது சரியல்ல' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழக கோரிக்ககை நிராகரிப்பு: இதற்கிடையில், "முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிடும் படி, பிரதமருக்கு எந்த வேண்டுகோளும் விடுக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக, கேரள அரசுகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் முன் விசாரணக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், ""முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட அதிகார குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என, கேட்பது சரியாக இருக்காது' என்றார். இதையடுத்து, அணை விவகாரத்தில் தலையிடும்படி, பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அதே நேரத்தில், அணையின் பாதுகாப்பையும், இதர தமிழக அரசின் சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உத்தரவாதத்தையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளதால், "முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றும் நீதிபதிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: