புதன், 14 டிசம்பர், 2011

2G ராஜா தன் தரப்பு வாதத்தை, கோர்ட்டில் தெரிவிக்க முடிவு

புதுடில்லி: "2ஜி' ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அடுத்த வாரத்தில் இருந்து, தன் தரப்பு வாதத்தை, கோர்ட்டில் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி, துவங்கிய விசாரணையின்போது, ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில், மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., அதிகாரிகள் தாக்கல் செய்து, விசாரணை முடிவடைந்து விட்டதாக, அறிக்கை தாக்கல் செய்யாதவரை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவது இல்லை' என்றார். இந்நிலையில், இந்த வழக்கின் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கோர்ட்டில், தன் தரப்பு வாதத்தை தெரிவிக்க, ராஜா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக, ராஜா விவகாரங்களை கவனித்து வரும் வழக்கறிஞர் கூறுகையில், "இந்த வழக்கின் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜாவின் முன்னாள் கூடுதல் தனிச் செயலரும், தொலைத் தொடர்புத் துறை அதிகாரியுமான ஆசிர்வாதம் ஆச்சாரி, இந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்கவுள்ளார். அப்போது, அவரிடம் குறுக்கு விசாரணை செய்ய, ராஜா தரப்பு முடிவு செய்துள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை: